டர்பன் : இந்திய டி20 அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன்கள் ரிங்கு சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டி இருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் அவர்கள் இருவரும் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். அது குறித்து பேசுகையில், தான் கேப்டனாக அவர்களுக்கு சொன்ன அறிவுரை ஒன்றை அவர்கள் கடைபிடித்ததை சுட்டிக் காட்டி அவர்களை பாராட்டினார்.

ஆஸ்திரேலிய டி20 தொடரில் ரிங்கு சிங் 22, 31, 46, 6 ரன்கள் எடுத்து இருந்தார். அவர் ரன் குவித்த மூன்று போட்டிகளிலும் இந்தியா வென்றது. அந்த வெற்றிகளுக்கு அவர் முக்கிய காரணமாகவும் இருந்தார். ஜிதேஷ் சர்மா 35 மற்றும் 24 ரன்கள் எடுத்து கடைசி இரண்டு போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்து இருந்தார். இருவருமே 170 என்ற ஸ்ட்ரைக் ரேட்டை ஒட்டி ரன் குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இருவருமே ஐந்து மற்றும் ஆறாவது பேட்டிங் வரிசையில் களமிறங்கி ஆடினர். அது பற்றி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், "இப்போது, சிங் ரிங்கு மற்றும் ஜிதேஷ் சர்மா தங்கள் மாநில அணிக்காகவும், ஐபிஎல்லுக்காகவும் பேட்டிங் செய்த அதே பேட்டிங் வரிசையில் இங்கேயும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் மாநிலத்திற்காகவும், ஐபிஎல் அணிக்காகவும் ஆடியது போலவே ஆடுமாறு கூறினோம். ஆஸ்திரேலிய டி20 தொடரில் அவர்கள் அதே போலவே ஆடினார்கள். எப்போதெல்லாம் அணி சிக்கலில் இருந்ததோ அப்போதெல்லாம் தங்களை வெளிப்படுத்திக் கொண்டு சிறப்பாக ஆடினார்கள்." என்றார்.
மேலும், "நான் அவர்களிடம் ஒன்றே ஒன்றை மட்டுமே கூறினேன். அணியைப் பற்றி முதலில் சிந்தியுங்கள். அதன் பின் உங்கள் சொந்த மைல்கல் சாதனைகளை பற்றி சிந்தியுங்கள் என்று கூறினேன். அதனால், அவர்களுக்கான சூழ்நிலை எளிதாக அமைந்தது" என்றார் சூர்யகுமார் யாதவ்.
அடுத்து தென்னாப்பிரிக்க டி20 தொடரில் ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா பங்கேற்க உள்ள நிலையில், இப்போதும் கேப்டன் சொன்னதை அப்படியே பின்பற்றி சிறப்பாக ஆடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.