டர்பன் : தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய டி20 அணியில் இடம் பெற்று இருந்தாலும் அவரது வாய்ப்பை மூத்த வீரரான ரவீந்திர ஜடேஜா போட்டி போட்டுக் கொண்டு தட்டிப் பறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கே முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. 2024 டி20 உலகக்கோப்பைக்கான வீரர்களை தேர்வு செய்யும் தொடராகவும் இது அமையும் என்பதால் ஒவ்வொரு வீரரும் தனக்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் டி20 தொடரில் நான்கில் ஒரு ஸ்பின்னராகவே இடம் பெற்றுள்ளார். அவரைத் தவிர அணியில் ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் இடம் பெற்றுள்ளனர்.
வாஷிங்டன் சுந்தர் கடந்த காலங்களில் சிறப்பாக பந்து வீசி, பேட்டிங்கில் ரன் குவித்து நல்ல ஆல் - ரவுண்டராக இருந்த போதும் கடந்த சில மாதங்களாக அவரது ஃபார்ம் மோசமாக உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. பேட்டிங்கிலும் அவர் பெரிதாக ரன் குவிக்கவில்லை.
அதனால், மற்ற மூன்று ஸ்பின்னர்களுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் ரவீந்திர ஜடேஜா நிச்சயம் இரண்டு போட்டிகளில் ஆடுவார் என கூறப்படுகிறது. அவர் தென்னாப்பிரிக்காவுக்கு தாமதமாக செல்வார் என கூறப்படுவதால் முதல் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார். அந்தப் போட்டியில் குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய் இடம் பெற வாய்ப்பு அதிகம்.
ரவி பிஷ்னோய் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை வென்று இருந்தார். அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் வெளிநாட்டில் அவரால் அதே போல விக்கெட் வீழ்த்த முடிகிறதா? என்ற பரிசோதனை செய்ய அவருக்கு மூன்று போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கும். வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம் என்றே கூறப்படுகிறது.