மும்பை : இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் இந்தத் தொடரில் யார் தொடக்க வீரர்களாக களமிறங்க போகிறார்கள் என்ற சந்தேகம் இன்னும் நிலவி வருகிறது.
ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோர் இந்த தொடரில் விளையாட படாத நிலையில் சூரியகுமார் யாதவ் கேப்டனாக இருக்கிறார். இதேபோன்று துணை கேப்டனாக ஜடேஜா களமிறங்குகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக t20 தொடரில் இந்திய அணியில் தொடக்க வீரராக ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்க தொடரில் கில் அணிக்கு திரும்பிருக்கிறார். இதனால் கில் தான் தொடக்க வீரராக களம் இறங்குவார் என்பது 100 சதவீதம் உறுதி. ஆனால் அவருக்கு ஜோடி யார் என்ற கேள்விக்கான பதில் இன்னும் தெரியவில்லை.
ஏனென்றால் ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அணியில் இருக்கிறார்கள் இந்த இரண்டு பேருக்கு ஏதேனும் ஒருவருக்கு தான் அணியில் இடம் கிடைக்கும். நடந்து முடிந்த தொடரில் ருதுராஜ் அதிக ரன்களை குவித்து அசத்தியிருக்கிறார். ஆனால் ருதுராஜை விட ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடக் கூடியவர். 30 ரன்களை 15 பந்துகளில் அடித்து விட்டு சேவாக் போல் ஆட்டம் இழந்து விடுவார்.
டி20 கிரிக்கெட்டில் இத்தகைய வீரர்களுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் ருதுராஜை குறைத்து மதிப்பிட முடியாது. ருதுராஜ் களத்தில் நின்று அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ப்பதில் வல்லவர். இன்னும் சொல்லப்போனால் கடைசி ஓவர் வரை நின்று ரன்களை அடிப்பார் எனினும் கில்லும் அதே போல் தான் விளையாடுவார். இதனால் ஒரே மாதிரி இரண்டு வீரர்கள் தொடக்கத்தில் இருப்பதை அணி நிர்வாகம் விரும்பவில்லை.
இதன் காரணமாக ருதுராஜை விட ஜெய்ஸ்வாலுக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது. இடது கை, வலது கை காம்பினேசனுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த நிலையில் இன்னும் சில கிரிக்கெட் விமர்சகர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜை தொடக்க வீரராக களம் இறக்கி கில்லை விராட் கோலி இடத்தில் விளையாட வையுங்கள் என அறிவுறுத்திருக்கிறார்கள். இதனால் வரும் டி20 உலக கோப்பையில் யார் எந்த இடத்தில் விளையாட போகிறார்கள் என்பதை இந்த தொடரில் இருந்து இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுக்கும்.