அகமதாபாத்: டி20 உலகக் கோப்பை 2026 சூப்பர் 8 போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக அபிஷேக் சர்மா அபாரமாக விளையாடுவார் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மூன்று தொடர்ச்சியான டக்குகளுடன் வெளியேறிய பிறகு, நாளை நடைபெறவுள்ள சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில், உலக நம்பர் 1 வீரரான அபிஷேக். எதிரணி வியூகங்களை முறியடிக்க வேண்டும் என்று சபா கரீம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து பேசிய சபா கரீம், அபிஷேக் ஷர்மா பொறுமையாக விளையாடி, தனது வழக்கமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி, பின்னர் அதிரடியை காட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், அபிஷேக் ஷர்மாவுக்கும் இஷான் கிஷானுக்கும், தென்னாப்பிரிக்காவின் மார்க்ரமுக்கும் இடையிலான மோதல் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று கரீம் கணித்துள்ளார்.

"அபிஷேக் ஷர்மா தற்போது ஆஃப்-ஸ்டம்பிற்கு வெளியே தவறான வழியில் விளையாட முயற்சிக்கிறார். நான் ஏற்கனவே கூறியது போல், நேர்த்தியான பேட் உடன் விளையாடி, ஸ்ட்ரைக்கை மாற்றி ஆடுவதில் தவறில்லை. அபிஷேக் இப்போது இந்த வழக்கமான அதிரடியிலிருந்து விடுபட வேண்டும். நீண்ட காலம் விளையாடவும், மீண்டும் ஃபார்முக்கு திரும்பவும், இத்தகைய பந்துவீச்சுக்கு எதிராக எப்படித் தயாராக வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். பல வீரர்கள் சந்திக்கும் ஒரு சவாலான கட்டத்தை அபிஷேக் கடந்து வருகிறார். இது அவருக்கு ஒரு பெரிய சோதனை."
“ஒருவேளை அவர் நேரம் எடுத்துக்கொண்டு, நேர்த்தியான பேட் உடன் ஆடி, முதல் பந்திலிருந்தே 200-225 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ரன் சேர்க்க வேண்டும் என்ற அழுத்தத்தை விட்டுவிட்டால், அவருக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது. அணுகுமுறையில் மாற்றம் இருக்கத் தேவையில்லை, ஆனால் தனது பேட்டிங் ஸ்டைலுக்கு ஏற்ப விளையாட்டில் சில மாற்றங்களைச் செய்யலாம். ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் சரியாக ஆடினால், அவர் அதை எளிதாக ஈடுசெய்ய முடியும்,” என்று கரீம் தெரிவித்தார்.
“இந்திய அணி அதிக நம்பிக்கையுடன் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆம், பெரிய அணிகளிடம் ஆட்டத்திறனில் ஒரு சரிவு உள்ளது. நாம் தோற்கவில்லை என்றாலும், முக்கியமான தருணங்களில் நாம் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும், ஆனால் அப்படிச் செய்யவில்லை. நமது பந்துவீச்சுத் தாக்குதல் வலுவாக இருப்பது நல்லது. அதை நன்றாக ஈடுசெய்து பெரிய வித்தியாசத்தில் போட்டிகளில் வெற்றி பெற்றோம். இப்போது இந்தியா தனது உச்சபட்ச ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மிகவும் தாமதமாகிவிடும்." என்று சபா கரீம் அறிவுறுத்தினார்.
லீக் சுற்றில் இந்திய அணி அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தியது. அதேசமயம், தென்னாப்பிரிக்கா, கனடா, ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளை வீழ்த்தி வெற்றிப்பாதையில் உள்ளது. இந்த நிலையில், வலுவான பந்துவீச்சுப் படையுடன் இரு அணிகளும் மோதவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.