அகமதாபாத்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய கிரிக்கெட் அணி, சர்வதேச டி20 அரங்கில் யாராலும் அசைக்க முடியாத ஒரு சாதனையை உருவாக்கி இருக்கிறது. அதே சமயம் தென்னாப்பிரிக்கா அணியோ, கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை ஒரு டி20 தொடரில் கூட வீழ்த்த முடியாமல் திணறி வருகிறது.
டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை ஒரு இருதரப்பு தொடரில் தென்னாப்பிரிக்கா வீழ்த்தி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், கடைசியாக 2015 அக்டோபரில் தான் அவர்கள் இந்தியாவைத் தொடரில் வீழ்த்தினார்கள். தோனி கேப்டனாக இருந்த காலம் அது. அதன் பிறகு கோலி, ரோஹித், பாண்டியா, சூர்யகுமார் யாதவ் என பல கேப்டன்கள் வந்துவிட்டனர். ஆனால் தென்னாப்பிரிக்காவால் ஒரு முறை கூட இந்தியாவை தொடரில் வீழ்த்த முடியவில்லை.

இந்திய அணியின் தற்போதைய ஃபார்மை பார்த்தால் எதிரணிகளுக்கு காய்ச்சல் வந்துவிடும். இது இந்தியா வெல்லும் 8-வது தொடர்ச்சியான டி20 தொடர் வெற்றியாகும். மொத்தமாக கடந்த 14 தொடர்களாக இந்தியா தோல்வியையே சந்திக்கவில்லை. இந்த 14 தொடர்களில் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டி, 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 ஆசிய கோப்பை சாம்பியன் பட்டங்களும் அடக்கம்.
கடைசியாக ஆகஸ்ட் 2023-ல் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 3-2 என இருதரப்பு தொடரில் தோற்றது தான் இந்தியா சந்தித்த கடைசித் தொடர் தோல்வி. அதன் பிறகு இந்தியா வெற்றி நடை தான் போடுகிறது.
மறுபுறம் தென்னாப்பிரிக்காவின் டி20 ரெக்கார்ட் படுமோசமாக உள்ளது. ஜனவரி 2023 முதல் இதுவரை அவர்கள் 13 இருதரப்பு தொடர்களில் விளையாடியுள்ளனர். அதில் அவர்கள் வென்றது ஒரே ஒரு தொடர். டிசம்பர் 2024-ல் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் தான் வெற்றி கிடைத்தது. மற்ற அனைத்திலும் தோல்வியே மிஞ்சியுள்ளது. உலக சாம்பியனான இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்த நினைத்த தென்னாப்பிரிக்காவின் கனவு, இந்த முறையும் கலைந்துபோனது.