கொல்கத்தா: தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெறும் 93 ரன்களுக்குச் சுருண்டு 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், பலரும் இப்போட்டியில் நடந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டியும், பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் முடிவுகளைக் கேலி செய்தும் சமூக ஊடகங்களில் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்குப் பார்க்கலாம்.
பல ஆண்டுகளாகவே, இந்திய மண்ணில் இந்திய அணி தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அந்த 'கோட்டை' சமீப காலமாக உடைந்து வருவதாகக் குறிப்பிட்டு, இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடிய கடைசி ஆறு டெஸ்ட் போட்டிகளில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என ஒரு மீம்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.

பயிற்சியாளர் கௌதம் கம்பீர், இந்திய அணியை ஆல்ரவுண்டர்களால் நிரப்பி வைத்திருப்பதாக விமர்சனங்கள் உள்ளன. ஆல் ரவுண்டர்களை சேர்த்து 8 பேட்ஸ்மேன்கள் இருந்தும், இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பேட்டிங்கில் சொதப்பி இருக்கிறது. இதைக் குறிப்பிட்ட ரசிகர்கள், "பத்தாவது மற்றும் 11-வது இடத்தில் யாரும் சரியாக ரன் குவிப்பதில்லை," எனக் கூறி, அடுத்த போட்டியில் அவர் தனக்கு விருப்பமான வீரரான ஹர்ஷித் ராணாவை அணியின் பிளேயிங் லெவனில் சேர்ப்பார் என கேலி செய்து ஒரு மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.
மேலும், கௌதம் கம்பீரின் விசித்திரமான முடிவுகளை வைத்து, "என்னய்யா பண்ணிட்டு இருக்க?" என ஆதங்கத்தில் ஒருவர் கேள்வி கேட்பதுபோல ஒரு மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, அவர் பேட்டிங் ஆர்டரை மாற்றுவதும், பிளேயிங் லெவனை சகட்டுமேனிக்கு மாற்றுவதையும் விமர்சனம் செய்து, ஒருவர் என்னய்யா பண்ணிட்டு இருக்க? என கேட்பது போல மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.
வாஷிங்டன் சுந்தர் ஒரு போட்டியில் எட்டாம் வரிசையில் பேட்டிங் இறங்குகிறார்; மற்றொரு போட்டியில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் இறங்குகிறார். துருவ் ஜுரல் ஒரே போட்டியில் ஒரு இன்னிங்ஸில் ஏழாம் வரிசையிலும் மற்றொரு இன்னிங்ஸில் நான்காம் வரிசையிலும் இறங்குகிறார்.
சாய் சுதர்சன் கடைசி டெஸ்ட் போட்டியில் 87 ரன்கள் மற்றும் 39 ரன்கள் எடுத்திருந்தார். அப்படி இருந்தும் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் அளிக்கப்படவில்லை. எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் அதிகபட்சம் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் இருந்தாலே போதுமானது என்று கூறப்படும் நிலையில், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி நான்கு ஸ்பின்னர்களைப் பயன்படுத்தியது. இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டித்தான், கௌதம் கம்பீரை ரசிகர்கள் ஆதங்கத்துடன் சாடி வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் செய்ய வரவில்லை. அவர் காயம் காரணமாக இரண்டாவது நாள் அன்று மருத்துவமனைக்குச் சென்று இருந்தார். அவருக்குக் கழுத்துப் பகுதியில் உள் காயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், அவர் கேப்டன் என்ற நிலையில், சில பந்துகளை ஆவது வந்து சந்தித்திருக்கலாம் என்ற ஆதங்கமும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இதைச் சுட்டிக்காட்டி ஒரு மீம்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடந்த சம்பவங்களை ஒப்பிட்டு ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர். அனில் கும்ப்ளேவுக்கு தனது தாடைப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்ட போதும், அந்தக் காயத்துடன் வந்து ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ரிஷப் பண்ட் சமீபத்தில் இங்கிலாந்தில் கை விரல்களில் பலத்த காயம் ஏற்பட்ட போதும் வந்து பேட்டிங் செய்தார். ஒருமுறை ரோஹித் சர்மாவுக்கு பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது கட்டைவிரல் அதன் பகுதியிலிருந்து விலகிவிட்டது. அதுபோன்ற சூழ்நிலையில் எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் பேட்டிங் செய்ய முடியாது. ஆனால், அதை அப்போதைக்குச் சரிசெய்து கொண்டு வலியுடன் பேட்டிங் செய்தார் ரோஹித் சர்மா.
இந்தச் சம்பவங்களை எல்லாம் ஒப்பிட்டு, ஒரு கேப்டன் என்பதற்காக சுப்மன் கில் ஒரு பந்தையாவது வந்து சந்தித்திருக்கலாம் என ரசிகர்கள் விமர்சித்து இருக்கின்றனர்.
கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக வந்ததிலிருந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு முக்கிய நாடுகளுக்கு எதிராக இந்திய அணி 14 போட்டிகளில் விளையாடி, மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்று இருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டி, "இதற்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்ட," என விமர்சிப்பது போல ஒரு மீம்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.