மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் வெள்ளை நிற பந்து கிரிக்கெட் சீனியர் வீரர்கள் ஓய்வெடுத்துக் கொண்ட நிலையில் ஜூனியர் வீரர்கள் டி20 ஒருநாள் தொடரில் விளையாடுகின்றனர்.
இந்த நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாகும்.

இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணிக்கு திரும்பும் சீனியர் வீரர்களின் செயல்பாடும் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழும் முகமது சமி காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலக வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இன்னும் டெஸ்ட் தொடருக்கு 12 நாட்களே உள்ள நிலையில் அதற்குள் ஷமியின் காயம் குணமடைய வாய்ப்பு இல்லை என தெரிகிறது. இதனால் சமி டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளது. பும்ரா, சிராஜ், சமி என்ற மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இணைந்து செயல்படும்போது தென்னாபிரிக்க வீரர்களுக்கு அது கடும் திண்டாட்டமாக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஆனால் தற்போது ஷமி இல்லாததால் இளம் வீரர் பிரசித் கிருஷ்ணாவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரசித் கிருஷ்ணா அண்மையில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் ஒரு ஹாட்ரிக் உட்பட ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பிரசித் கிருஷ்ணா நல்ல உயரம் என்பதால் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களுக்கு அது மிகப்பெரிய சாதகமாக இருக்கும். எனினும் சமி போன்ற ஒரு வீரர் இடத்தை பிரசித் கிருஷ்ணாவால் நிரப்ப முடியுமா என்று கேள்வி கேட்டால் அது சந்தேகமே. இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இந்த சோதனையை இம்முறையாவது இந்தியா மாற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படி ஒரு செய்தி வந்திருக்கிறது.