கேப் டவுன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினை அணியில் இருந்து நீக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரவீந்திர ஜடேஜா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட தயாராகி விட்டதால் அவரை ஆட வைக்க கேப்டன் ரோஹித் சர்மா - பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ஜடேஜா முதுகு வலி காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட்டில் இந்திய அணி நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற் பந்துவீச்சாளரை ஆட வைக்க வேண்டும் என திட்டமிட்டு ஜடேஜாவை தேர்வு செய்ய நினைத்தது. ஆனால், அவர் முதுகு வலியுடன் இருந்ததால், அஸ்வின் தேர்வு செய்யப்பட்டார்.
முதல் டெஸ்ட்டில் அஸ்வின் பந்துவீச்சில் கட்டுக் கோப்பாக செயல்பட்டு 19 ஓவர்களில் 41 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். ஆனால், முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்பதால் நீக்கப்படுவார் என ஆகாஷ் சோப்ரா போன்ற சில முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், முதல் டெஸ்ட்டில் அஸ்வினுக்கு சரியான வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதே உண்மை. முதல் டெஸ்டின் இரண்டாவது நாள் அன்று தென்னாப்பிரிக்கா தன் முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. அன்றைய தினம் இந்திய அணியின் நான்கு வேகப் பந்துவீச்சாளர்கள் ஆளுக்கு 15 முதல் 19 ஓவர்கள் வரை வீசி இருந்தனர்.
ஆனால், அஸ்வினுக்கு 8 ஓவர்கள் மட்டுமே பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. இத்தனைக்கும் ஷர்துல் தாக்குர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் ஆகியோர் அப்போது ஓவருக்கு 4 ரன்களுக்கும் அதிகமாக ரன்களை வாரி இறைத்து இருந்தனர். ஆனாலும், குறைவான ரன்கள் கொடுத்த அஸ்வினுக்கு ஓவர்கள் அளிக்கப்படவில்லை.
அடுத்து மூன்றாவது நாளில் அஸ்வினுக்கு கூடுதலாக 11 ஓவர்கள் அளிக்கப்பட்டது. அவர் 1 விக்கெட் வீழ்த்தினார். பொதுவாக டெஸ்ட் போட்டிகளில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு அதிக ஓவர்கள் கொடுக்கப்படும். ஆனால், தென்னாப்பிரிக்காவில் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் போட்டி நடைபெற்றதால் அஸ்வினுக்கு ஓவர் தரவில்லை.
ஆனால், அஸ்வின் தான் மற்ற நான்கு பந்துவீச்சாளர்களை விடவும் குறைவாக ரன்கள் கொடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு அழுத்தம் கொடுத்து இருந்தார். இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட்டில் அஸ்வின், ஜடேஜா என இருவரையும் பயன்படுத்தினால் இருவரும் தங்கள் அனுபவத்தால் தென்னாப்பிரிக்க அணிக்கு அழுத்தம் கொடுப்பார்கள். அதை பயன்படுத்தி பும்ரா, முகமது சிராஜ் விக்கெட் வீழ்த்தலாம். அதற்கு பதிலாக அஸ்வினை நீக்கி விட்டு, ஜடேஜாவை மட்டும் பயன்படுத்த திட்டமிட்டு வருகிறார் ரோஹித் சர்மா.
ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அஸ்வினை டெஸ்ட் அணியில் இடம் பெற விடாமல் செய்து வருகிறது இந்திய அணி நிர்வாகம். குறிப்பாக 2023இல் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்காது என்ற காரணத்தை கூறி அஸ்வினை அணியில் சேர்க்கவில்லை. அப்போது இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தது. இப்போதும் அதே போல அணியில் இடம் பெற்றாலும் அதிக ஓவர்கள் கொடுக்காமல் இருப்பதும், பிட்ச்சை காரணம் காட்டி அணியில் இருந்தே நீக்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.