செஞ்சுரியன் : அணியில் வாய்ப்பு கொடுத்தால் நன்றியோடு இருந்து, அணிக்காக தன் வேலையை சரியாக செய்ய வேண்டும் என இளம் வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவை விமர்சனம் செய்து இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்க்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதற்கு மோசமான பந்துவீச்சு மிகப் பெரிய காரணமாக இருந்தது.

இந்தப் போட்டியில் பிரசித் கிருஷ்ணா 20 ஓவர்களில் 93 ரன்கள் வாரிக் கொடுத்தார். ஷர்துல் தாக்குர் 19 ஓவர்களில் 101 ரன்கள் கொடுத்து இருந்தார். ஷர்துல் ஆல் - ரவுண்டர் என்பதால் அவர் மீது எழுந்த விமர்சனத்தை விட, பிரசித் கிருஷ்ணா மீது தான் கடுமையான விமர்சனம் எழுந்தது. அவரால் சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீச முடியவில்லை. அவர் தடுமாறியது கண்கூடாக தெரிந்தது.
இந்த நிலையில், போட்டிக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது ரோஹித் சர்மா, இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து பேசினார். அப்போது, "பும்ரா சிறப்பாக பந்து வீசினார். அவருடைய திறமை பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு போதிய ஆதரவு மற்ற பந்துவீச்சாளர்களிடம் இருந்து கிடைக்கவில்லை. மற்ற மூன்று பந்துவீச்சாளர்களும் (சிராஜ், பிரசித், ஷர்துல்) முதுகை வளைத்து பந்து வீசினாலும் எதுவும் வேலை செய்யவில்லை." என்றார்.
மேலும், பிரசித் கிருஷ்ணா இதுவரை 13 உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடி உள்ளார். அவருக்கு அனுபவம் இல்லை என்பதை எண்ணி அவரே தயக்கத்துடன் இருந்ததாக கூறி, அதன் காரணமாகவே அவர் மோசமாக செயல்பட்டதாக விமர்சனம் செய்தார் ரோஹித் சர்மா.
"இங்கே கால்களினால் வேலை செய்வதை விட, மனதில் தான் அதிக வேலை செய்ய வேண்டி உள்ளது. நீங்கள் எப்படி உங்கள் மனதை வைத்துக் கொண்டு போட்டியில் ஆடப் போகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். "நான் நிறைய டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. நிறைய உள்ளூர் டெஸ்ட்களில் ஆடவில்லை" என நினைத்துக் கொண்டு இருந்தால் அது எந்த வகையிலும் உதவாது. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அதற்கு நீங்கள் நன்றியுடன் இருந்து அணியில் உங்களுக்கான வேலையை சரியாக செய்ய வேண்டும்" என பிரசித் கிருஷ்ணாவை விளாசினார் ரோஹித் சர்மா.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பிரசித் கிருஷ்ணா ஆடுவது சந்தேகம் தான். அவரை நீக்கி விட்டு முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், முகமது ஷமி முன்பே நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ஆவேஷ் கான் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.