
வேடிக்கை சம்பவங்கள்
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் மோதிக்கொண்டனர். அதன் பின்னர் பும்ராவை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தது. நேற்று தென்னாப்பிரிக்க வீரரை ரிஷப் பண்ட் திட்டியது, ரவிச்சந்திரன் அஸ்வினின் ஸ்டம்ப் மைக் ஆடியோ என பல வேடிக்கை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

போராட்டம்
இந்நிலையில் ஆட்டத்தின் நடுவரான எராஸ்மஸும் சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துள்ளார். இந்த 2வது டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற இன்னும் 122 ரன்கள் தான் தேவை. 2 நாள் ஆட்டங்கள் மீதமுள்ளதால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு குறைவாகவே உள்ளது. எனினும் இந்திய பவுலர்கள் விடாப்பிடியாக போராடி வருகின்றனர்.

அம்பயரின் புலம்பல்
இதுகுறித்து பேசிய எராஸ்மஸ், இந்திய வீரர்கள் ஒவ்வொரு ஓவரை வீசும் போதும் எனக்கு ஹார்ட் அட்டாக்கே வரும்படி நடந்துக்கொள்கின்றனர். ஏனெனில் தொடர்ச்சியாக வெற்றிக்காக விடாப்பிடியாக போராடும் இந்திய அணி வீரர்கள் ஒவ்வொரு ஓவரின் போதும் அப்பீல் செய்கின்றனர். இதனால் முடிவு எடுப்பதில் எனக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. அந்த அளவிற்கு இந்திய வீரர்கள் தங்களது அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஓய்வே தரவில்லை
துரு துருவென இந்திய பவுலர்கள் இருப்பதால் என்னாலும் சற்று நிதானமாக இருக்க முடியவில்லை. எந்நேரமும் உன்னிப்பாகப் போட்டியை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ஓய்வு கொடுக்க மாட்டோம் என்கிறார்கள் என்று நகைச்சுவையாக கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தற்போது வரை 118 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. வெற்றி பெற இன்னும் அந்த அணிக்கு 122 ரன்கள் தேவை. இதனால் யாருக்கு வெற்றி கிடைக்கும் என இரு அணி ரசிகர்களும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











