கவுகாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் 0-2 என்ற கணக்கில் இழந்துள்ளது இந்திய அணி. கவுகாத்தியில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றதைத் தொடர்ந்து, தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் அணியின் அணுகுமுறை மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், இந்திய அணியின் செயல்பாட்டை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இந்திய அணி கடந்த 12 மாதங்களில் சொந்த மண்ணில் சந்திக்கும் இரண்டாவது 'ஒயிட்வாஷ்' இதுவாகும். இந்த படுதோல்வி, இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்துப் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்திய அணியின் தொடர் தோல்விகளால் கொதிப்படைந்த வெங்கடேஷ் பிரசாத், தனது 'X' (ட்விட்டர்) பக்கத்தில் அனல் பறக்கும் விமர்சனங்களை வைத்துள்ளார்.

"டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி செயல்படும் விதம் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆல்-ரவுண்டர்கள் மீதான இந்த மோகம் ஒரு முழுமையான மூளைச் சலவை ஆகும். அதிலும் குறிப்பாக, அவர்களுக்குப் பந்துவீச வாய்ப்பே கொடுக்காதபோது இது முட்டாள்தனமாக இருக்கிறது" என்று கம்பீரின் 'ஆல்-ரவுண்டர்' வியூகத்தை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
தொடர்ந்து, "படுமோசமான திட்டங்கள், படுமோசமான திறமைகள், படுமோசமான உடல் மொழி.. சொந்த மண்ணில் சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு இரண்டு முறை ஒயிட்வாஷ் என்ற அவமானம். அடுத்த டெஸ்ட் போட்டிக்கு 9 மாதங்கள் இடைவெளி இருக்கிறது என்பதற்காக, இந்தத் தோல்வியை அப்படியே மறந்துவிடக் கூடாது. இந்த எதிர்மறையான அணுகுமுறை மாற வேண்டும்" என்று வெங்கடேஷ் பிராசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போட்டிக்குப் பிறகு பேசிய தற்காலிக கேப்டன் ரிஷப் பண்ட், தென்னாப்பிரிக்காவின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்வது போல பேசினார். "இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு அணியாக நாங்கள் முன்னேற வேண்டும். தென்னாப்பிரிக்காவை பாராட்டியே ஆக வேண்டும். அவர்கள் தொடர் முழுவதும் ஆதிக்கம் செலுத்தினர். சொந்த மண்ணில் ஆடுகிறோம் என்பதற்காக கிரிக்கெட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது" என்றார்.
மேலும், "போட்டியில் கிடைத்த நல்ல தருணங்களை நாங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதுதான் இந்தத் தொடர் முழுவதும் நாங்கள் செய்த தவறு. இந்தத் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, ஒரு அணியாக மீண்டு வருவோம். எங்கள் திட்டங்களில் கவனம் செலுத்துவதுதான் இந்தத் தொடரிலிருந்து நாங்கள் எடுத்துச்செல்லும் 'பாசிட்டிவான' விஷயம்," என்று பண்ட் குறிப்பிட்டார்.
உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்பிரிக்கா, பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் இந்தியாவை வீழ்த்தி தங்களது தகுதியை நிரூபித்துள்ளது. ஆனால், இந்திய அணியின் இந்த படுதோல்வி, பயிற்சியாளர் கம்பீரின் வியூகங்கள் மற்றும் அணித் தேர்வின் மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. வெங்கடேஷ் பிரசாத் கூறியது போல, இந்தத் தோல்வியை எளிதில் கடந்து செல்லாமல், தீவிரமாக சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.