டர்பன் : தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று ஒருநாள் மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.இதற்கான அட்டவணையை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்திருக்கிறார்.
ஐசிசி யின் உயர்மட்ட குழு கூட்டம் டர்பனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் பிசிசிஐ நிர்வாகிகளும் ஆலோசனை நடத்தி தொடருக்கான அட்டவணையில் வெளியிட்டனர்.

இந்தத் தொடர் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் நடைபெறுகிறது. அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலிய உடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது டிசம்பர் 10ஆம் தேதி இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி முதலில் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. டிசம்பர் 10, 12 மற்றும் 14ம் தேதி இந்தப் போட்டிகள் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இது டிசம்பர் 17, 19 மற்றும் 21ஆம் தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.இதனை தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இடம்பெற்று இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டேவான டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி நியூ இயர் டெஸ்ட் ஆக ஜனவரி 3ஆம் தேதி கேப்டவுனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி கடைசியாக 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது ஓமிக்ரான் அலை வீசியதால் ஒரு நாள் தொடர் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு இரண்டு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.