மும்பை : தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணியில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் காஷ்மீர் மாநில வேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்கை இந்தியா ஏ அணியில் கூட தேர்வு செய்யவில்லை பிசிசிஐ.
காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து சுற்றுப் பயணத்தின் போது இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். இதுவரை 10 ஒருநாள் போட்டிகள், 8 சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி இருக்கிறார். ஆனால், தற்போது இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இது குறித்து தன் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

சுமார் 150 கிலோமீட்டர் வேகத்தில் எளிதாக பந்து வீசும் ஆற்றல் கொண்டவர் என்பதாலேயே உம்ரான் மாலிக் இந்திய அணியில் இடம் பிடித்தார். அந்த வேகத்தில் பந்து வீசி அவர் விக்கெட் வீழ்த்தினாலும், அதிக ரன்களை விட்டுக் கொடுக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது.
அதனால், அவருக்கு அதன் பின் இந்திய அணியில் இருந்து அழைப்பு வரவில்லை. ஆனால், தற்போது தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இதுவரை சில போட்டிகளில் ஆடி வாய்ப்பின்றி இருக்கும் பல வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிலருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. மற்றவர்களுக்கு இந்தியா ஏ அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன் மூலம் அனைவருக்கும் தங்கள் திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், உம்ரான் மாலிக்கிற்கு அந்த வாய்ப்பு கூட வழங்கப்படாமல் இருப்பது தான் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
"உம்ரான் மாலிக்கை அணித் தேர்வின் போது கருத்தில் கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். சில காலம் முன்புவரை நீங்கள் அவரை அணியில் வைத்திருந்தீர்கள். நீங்கள் அவரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்துக்கு எதிராக களமிறக்கி ஆட வைத்தீர்கள். அதன் பிறகு, அவரை அணியில் காணவில்லை. நீங்கள் ஒருவரை மிகவும் அன்புடன் வைத்திருக்கிறீர்கள். ஒரு கட்டத்தில் அவர் திடீரென காணாமல் போகிறார். இது நல்லதல்ல" என்று ஆகாஷ் சோப்ரா கூறினார்.
மேலும், ""குறைந்த பட்சம் அவரை எதிர்கால திட்டத்திலாவது வைத்திருங்கள். உண்மையில், அவர் இந்தியா ஏ அணியில் கூட தேர்வு செய்யப்படவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் இந்திய அணியில் இருந்தார், இப்போது அவர் இந்தியா ஏ அணியின் ஒரு பகுதியாக கூட இல்லை என்பது எப்படி நடக்கும்?" என ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பினார்.
இர்பான் பதானும் இதே கேள்வியை சில நாட்கள் முன்பு எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் இந்தியாவின் அதிவேக பந்துவீச்சாளருக்கு இந்தியா ஏ அணியில் கூட இடமில்லையா? என கேள்வி எழுப்பி இருந்தார்.