கொல்கத்தா : தென்னாப்பிரிக்க அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் மார்கோ ஜான்செனை பார்த்து இந்திய பேட்டிங் படையே கொஞ்சம் பதற்றத்தில் இருக்கிறது என வலைப் பயிற்சியை பார்த்த பலரும் கூறுகின்றனர்.
அந்த அளவுக்கு விராட் கோலி, கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்றோர் த்ரோடவுன் பயற்சியில் அதிக பவுன்ஸ் பந்துகளையும், நன்கு உயரமாக பந்தை வீசும் படியும் கேட்டு பயிற்சி செய்தனர்.
இது எல்லாமே 6 அடி 9 இன்ச் உயரம் கொண்ட தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் மார்கோ ஜான்சென்னை சமாளிக்கத் தான். அவர் இந்த உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் ஆவார். அவர் 7 உலகக்கோப்பை போட்டிகளில் 16 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.

இதில் முக்கியமான விஷயம் ஜான்சென் இடது கை வேகப் பந்துவீச்சாளர் என்பது தான். பொதுவாகவே இந்திய வீரர்களுக்கு இடது கை வேகப் பந்துவீச்சாளர்கள் என்றாலே நடுக்கம் வந்துவிடும். இலங்கை அணிக்கு எதிராக 357 ரன்கள் குவித்த இந்திய அணி, அந்த அணியின் இடது வேகப் பந்துவீச்சாளர் மதுசங்காவிடம் மட்டும் 5 விக்கெட்களை இழந்து இருந்தது.
அதே போல, தென்னாப்பிரிக்காவின் ஜான்சென் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்திய வீரர்கள் இப்போதே பயப்படத் துவங்கி இருக்கிறார்கள். அவர் நான்கு ஷார்ட் பந்துகளை வீசுவார். ரோஹித் சர்மா, சுப்மன் கில் ஷார்ட் பந்துகளை புல் ஷாட் அடிப்பதில் வல்லவர்கள் என்றாலும், அவர்கள் வலது கை வேகப் பந்துவீச்சாளர்கள் வீசும் ஷார்ட் பந்துகளில் தான் அதிக புல் ஷாட்களை ஆடி இருக்கிறார்கள்.
வலது கை பேட்ஸ்மேனுக்கு இடது கை வேகப் பந்துவீச்சாளர் வீசும் ஷார்ட் பந்துகளை கணித்து ஆடுவது சிரமம். அந்த வகையில் சுப்மன் கில், ரோஹித் சர்மாவுக்கும் ஜான்சென் சிக்கலை ஏற்படுத்துவார். அடுத்து விராட் கோலி முதல் 10 ஓவர்களில் பேட்டிங் செய்ய வந்தால் வேகப் பந்துவீச்சாளர்கள் வீசும் ஷார்ட் பந்துகள் வீசினால் அதில் அவுட் ஆவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார்.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு இந்த உலகக்கோப்பை தொடரில் ஷார்ட் பந்துகள் தான் எமனாக மாறி உள்ளது. அதை சமாளிக்க இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஷார்ட் பந்துகளில் அவர் ரன் அடிக்கவே முயலவில்லை. கே எல் ராகுல் இதே ஜான்சனிடம் கடந்த டெஸ்ட் தொடரில் மூன்று முறை விக்கெட்டை இழந்து இருக்கிறார். அதனால், அவருக்கும் ஜான்சென் பெரிய அச்சுறுத்தல் தான்