கேப் டவுன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்ற போதும் விராட் கோலி கடைசி நிமிடங்களில் ஏமாற்றத்துடன் அமர்ந்து இருந்தார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மோசமாக ஆடி இன்னிங்க்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது. அந்தப் போட்டியில் ராகுல் சதம் அடித்தும், விராட் கோலி அரைசதம் அடித்தும் இருந்தனர்.

இந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சிறப்பாக ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்திய வீரர்களிலேயே தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள் குவித்த வீரர் கோலி மட்டும் தான் என்பதால் ஆவர் மீது எதிர்பார்ப்பு இன்னும் கூடியது.
இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸில் தென்னாப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து இந்தியா பேட்டிங் செய்த போது மூன்று இந்திய வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் சேர்த்தனர். ரோஹித் சர்மா 39 ரன்களும், சுப்மன் கில் 36 ரன்களும், விராட் கோலி 46 ரன்களும் எடுத்து இருந்தனர்.
அப்போது கடினமான பிட்ச்சில் கோலி மட்டுமே அதிக ரன் எடுத்த வீரர் என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பேசி வந்தனர். இந்த நிலையில் இரண்டாம் இன்னிங்க்ஸில் இந்திய அணிக்கு 79 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது தென்னாப்பிரிக்க அணி. பேட்டிங் செய்யவே கடினமான பிட்ச்சில் இந்திய அணி 57 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது.
அதை அடுத்து நான்காம் வரிசையில் விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தார். ரோஹித் சர்மா அப்போது களத்தில் இருந்தார். வெற்றிக்கு 22 ரன்கள் தேவை என்ற நிலையில் எப்படியும் ரோஹித் - கோலி ஜோடி அணியை வெற்றி பெற வைத்து விடும் என எண்ணிய நிலையில் கோலி 11 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
மார்கோ ஜான்சென் வீசிய பந்தில் கிளவுஸில் பந்து பட்டு கேட்ச் ஆனது. முதலில் கோலி கூட இது அவுட் இல்லை என்றே நினைத்தார். அம்பயரும் அவுட் இல்லை என கூறி விட்டார். ஆனால், ரிவ்யூவில் பந்து கிளவுஸில் பட்டது தெரிந்தது. அதனை அடுத்து கோலி அவுட் ஆகி பெரும் ஏமாற்றத்துடன் வெளியேறினார். வெளியே சென்ற பின்னரும் ஏமாற்றத்துடன் இருந்தார்.
ரோஹித் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 17 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டெஸ்ட் தொடரை 1 - 1 என சமன் செய்தது.