மும்பை : விராட் கோலி - ரவி சாஸ்திரி கூட்டணி கையில் இந்திய டெஸ்ட் அணி இருந்த போது, அணியின் எதிர்கால வளர்ச்சிக்காக அவர்கள் செய்த ஒரு விஷயத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா செய்யத் தவறி விட்டார்.
சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், தோனி ஆகியோர் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்களாக சில சாதனைகளையும், பல மோசமான தோல்விகளையும் சந்தித்துள்ளனர். குறிப்பாக வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் இவர்கள் மூவருமே குறைவான வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளனர்.
ஆனால், விராட் கோலி கேப்டனாக வந்த பின், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் சேர்ந்து அணியைக் கட்டமைப்பதில் பல புதுமைகளை செய்தார். ஆனால், தொடர்ந்து அணியை மாற்றுவதாக அவர்கள் மீது புகார் எழுந்தது. ஆனால், அணியை மாற்றிக் கொண்டே இருந்த போதும் சில நல்ல வீரர்களை அடையாளம் கண்டனர்.

குறிப்பாக வேகப் பந்துவீச்சாளர்களை அடையாளம் கண்டு அணியில் சேர்ப்பதில் கோலி - ரவி சாஸ்திரி தீவிரமாக இருந்தனர். அவர்களது காலத்தில் அதற்கு முன் சரியான வாய்ப்பின்றி இருந்த இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் முதன்மை பந்துவீச்சாளர்களாக மாறியதுடன் சிறப்பாக செயல்பட்டனர்.
அத்துடன் வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோர் டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆனார்கள். அணியில் முக்கிய பந்துவீச்சாளர்களாகவும் இருந்தனர். 2018-19 கால கட்டத்தில் இந்திய டெஸ்ட் அணியில் வேகப் பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், பும்ரா, பாண்டியா ஆகியோர் இருந்த போதும் விராட் கோலி - ரவி சாஸ்திரி கூட்டணி தங்களின் வேகப் பந்துவீச்சாளர் தேடலை நிறுத்தவில்லை.
அடுத்த கட்டமாக ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். அதன் பின் 2021இல் முக்கியமான ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஒரிரு போட்டிகளில் மட்டும் ஆட வேண்டி நவ்தீப் சைனி, நடராஜன் ஆகியோர் டெஸ்ட் அணியில் அறிமுகம் ஆனார்கள். இவர்கள் அனைவருமே அப்போது இந்திய அணியின் டெஸ்ட் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர்கள்.
பின்னர் 2021 துவக்கத்தில் விராட் கோலி, டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றார். அதன் பின் இந்திய டெஸ்ட் அணியில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் எந்த வேகப் பந்துவீச்சாளரும் அறிமுகம் ஆகாமல் இருந்தனர். நீண்ட இடைவெளிக்கு பின் முகேஷ் குமார் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆனார். தற்போது பிரசித் கிருஷ்ணா தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆகி உள்ளார். இவர்கள் இருவருமே தற்போது ஆளுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் அடி உள்ளனர்.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் முகமது ஷமி இல்லாத நிலையில் பும்ரா மற்றும் முகமது சிராஜ் மட்டுமே அனுபவம் கொண்ட வேகப் பந்துவீச்சாளர்களாக உள்ளனர். ஒருவேளை பும்ராவுக்கும் இப்போது காயம் ஏற்பட்டால், இந்திய அணி நிலை படுமோசமாக மாறி விடும். 2024ஆம் ஆண்டில் மட்டும் இந்திய அணி 14 டெஸ்ட் போட்டிகளில் ஆட உள்ளது. தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் ஆடும் போது நிச்சயம் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு காயம் ஏற்படும். இந்த நிலையில், எப்படி பும்ரா, சிராஜை மட்டும் வைத்துக் கொண்டு இந்திய அணி சமாளிக்கப் போகிறது என தெரியவில்லை.
முகமது ஷமி ஏற்கனவே காயத்தில் இருக்கிறார். முகேஷ் குமாருக்கு அனுபவம் போதவில்லை. பிரசித் கிருஷ்ணா தன் முதல் டெஸ்ட்டில் மிக மோசமாக தடுமாறி இருக்கிறார். அவர் இனி எப்படி செயல்படுவார் என்பது தெரியாது. ஷர்துல் தாக்குர் வேகப் பந்துவீச்சாளராக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இப்படி ஒரு நிலை இந்திய அணிக்கு வர முக்கிய காரணம், கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளில் நல்ல டெஸ்ட் வேகப் பந்துவீச்சாளர்களை அடையாளம் காணாமல் போனது தான்.