நவி மும்பை: ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முன்பாக பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியும் தென்னாபிரிக்க அணியும் பல பரிட்சை நடத்தியது. நவி மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரராக யார் களமிறங்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் டாசின் போதே இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இல்லை என்பதை சூரியகுமார் யாதவ் உறுதி படுத்துவிட்டார். இந்த நிலையில் இசான் கிசன் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இருவருமே முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடி 5.4 ஓவரில் எல்லாம் 80 ரன்கள் குவித்தனர். குறிப்பாக இசான் கிஷன் தொடக்க வீரராக 20 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார் இதில் ஏழு சிக்ஸர்களும், இரண்டு பவுண்டர்களும் அடங்கும். மறுபுறம் அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.
இன்னும் இருவரும் மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக ரிட்டையர்ட் அவுட் முறையில் களத்தை விட்டு வெளியேறினர். இதை அடுத்து மூன்றாவது வீரராக திலக் வர்மா விளையாடினார். காயத்திலிருந்து திரும்பிய அவர் வழக்கம் போல் தன்னுடைய அதிரடியை காட்டினார்.
மூன்று பவுண்டரி, மூன்று சிக்சர் என 19 பந்துகளில் 45 ரன்கள் திலக் வர்மா குவித்தார். இதேபோன்று கேப்டன் சூரியகுமார் யாதவும் 16 பந்துகளில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் என 30 ரன்கள் சேர்த்தார். நடுவரிசையில் அக்சர் பட்டேல் இரண்டு பவுண்டரி இரண்டு சிக்சர் என 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதேபோன்று ரிங்கு சிங் 16 ரன்களும், ஹர்திக் பாண்டியா 10 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். இதில் மூன்று சிக்சர், இரண்டு பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்தது. முக்கிய வீரர்கள் ரிட்டயர்டு அவுட் ஆன பின்பும் இந்திய அணி 20 ஓவர் முடிவில் இவ்வளவு பெரிய இலக்கை குவித்து இருப்பது இந்தியாவின் பேட்டிங்கின் பலத்தை காட்டி இருக்கிறது.