கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த பின் பேசிய துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தாங்கள் எடுத்த முடிவுகள் சரிதான், ஆனால் போட்டியில் எதிர்பார்த்தது போல சில விஷயங்கள் நடக்கவில்லை என உண்மையை போட்டு உடைத்து இருக்கிறார்.
இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி டை மட்டுமே செய்து இருந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இலங்கை அணி நிர்ணயத்த 241 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

முதல் போட்டியிலும், இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங்கில் செய்யப்பட்ட மாற்றங்களே இந்த மோசமான நிலைக்கு காரணம் என ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். முதல் ஒருநாள் போட்டியில் நான்காம் வரிசையில் வாஷிங்டன் சுந்தர் களம் இறக்கப்பட்டார். அந்தப் போட்டியில் அவரது விக்கெட்டுக்கு பின் இந்திய அணி வரிசையாக விக்கெட்களை இழந்து சரிவை சந்தித்தது.
அதேபோல இரண்டாவது ஒருநாள் போட்டியில் நான்காம் வரிசையில் சிவம் துபே மற்றும் ஐந்தாம் வரிசையில் அக்சர் பட்டேல் களம் இறக்கப்பட்டனர். ஆனால், நான்காம் மற்றும் ஐந்தாம் வரிசையில் இதுவரை ஆடி வந்த ஸ்ரேயாஸ் மற்றும் கே எல் ராகுல் ஆறாவது மற்றும் ஏழாவது வரிசையில் களம் இறக்கப்பட்டனர். இந்த பேட்டிங் வரிசை மாற்றமும் வேலை செய்யவில்லை.
இந்த நால்வரில் அக்சர் பட்டேல் மட்டுமே 44 ரன்கள் சேர்த்தார். சிவம் துபே மற்றும் கே எல் ராகுல் டக் அவுட் ஆனார்கள். ஸ்ரேயாஸ் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். எனவே, பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்திய அணியின் மிடில் ஆர்டரை வைத்து பரிசோதனை செய்ய நினைப்பதே இந்த மோசமான நிலைக்கு காரணம் என ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இது குறித்து பேசிய துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர், "இந்த தோல்வி அதிர்ச்சியா? எனக் கேட்டால் ஆம், இது அதிர்ச்சி தான். எங்களுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இந்த சூழ்நிலையை நீங்கள் பார்த்தால் பந்து நன்றாக ஸ்பின்னானதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை புரிந்து கொள்ளலாம். கடைசி போட்டியிலும் புதிய பந்தில் எளிதாக ரன் குவிக்க முடிந்தது. ஆனால், பந்து பழையதானவுடன் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது." என்றார்.
மேலும், "50 ஓவர் போட்டிகளில் இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் தோல்விகள் ஏற்படலாம். இரண்டு முறை இதே போல நடக்க என்ன காரணம் என்பதை நாங்கள் புரிந்து கொண்டு அதை சரி செய்ய பார்க்கிறோம். மிடில் ஆர்டரில் நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது பேட்ஸ்மேன்கள் மாற்றப்பட்டதை பார்த்தால் உங்களுக்கு சில சந்தேகங்கள் எழக் கூடும். ஆனால் நாங்கள் இடது கை மற்றும் வலது கை வீரர்கள் ஒரே நேரத்தில் களத்தில் இருக்க வேண்டும் என்பதாலேயே இந்த மாற்றங்களை செய்தோம்." என்றார்.
மேலும், "இலங்கை அணியில் ஆஃப் பின்னர் மற்றும் லெக் ஸ்பின்னர்கள் இருந்ததால் இவ்வாறு இடது - வலது பேட்ஸ்மன்களை ஜோடியாக ஆட வைக்க வேண்டும் என யோசித்தோம். எங்களது எண்ணம் சரிதான். ஆனால், அது வேலை செய்யவில்லை. அதனாலேயே பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். என்னை பொறுத்தவரை ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அது சரியான முடிவுதான்." என்றார்.