
சிறப்பான ஓப்பனிங்
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் சனகா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஜோடி அவிஷிங்கா ஃபெர்னாண்டோ - மினோத் பனுக்கா சிறப்பான அடித்தளத்தை அந்த அணிக்கு அமைத்துக் கொடுத்துள்ளனர். சீரான வேகத்தில் பவுண்டரிகளை அடித்த இவர்கள் முதல் விக்கெட்டிற்கு 77 ரன்களை சேர்த்தனர்.

அடுத்தடுத்து சரிந்த விக்கெட்
நீண்ட நேரமாக பிரிக்க முடியாமல் இருந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்களை எடுத்து யுவேந்திர சாஹல் பிரித்தார். சிறப்பாக ஆடி வந்த மினோத் பனுகா 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய பனுக்கா ராஜபக்ச டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்னர் அவிஷிங்காவுடன் ஜோடி சேர்ந்த தனஞ்ஜெய டி சில்வா நிதான ஆட்டம் மூலம் இலங்கையின் ஸ்கோரை உயர்த்தினார்.

இறுதிகட்ட போராட்டம்
71 பந்துகளில் 50 ரன்களை குவித்த அவிஷிங்கா புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய தசுன் சனகா, வானிண்டு ஹசரங்கா ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேற இலங்கை அணி 200 ரன்களுக்குள் 5 விக்கெட்களை எடுத்து தடுமாறியது. கடைசி 10 ஓவர்களில் அணியின் ஸ்கோரை உயர்த்தியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த நிலையில் சாரித் அசலங்கா 65 ரன்களும் சாமிக்கா கருணரத்னே 44 ரன்களும் விளாசி உதவினர். இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்தது.

இந்திய ரசிகர்கள் நம்பிக்கை
இந்திய அணி சார்பில் சுழற்பந்துவீச்சாளர் யுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார் தலா 3 விக்கெட்களும், தீபக் சாஹர்,2 விக்கெட்களையும் கைப்பற்றினார். முதல் ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி இதே அளவிற்கான இலக்கையே நிர்ணயித்திருந்தது. எனவே அதில் வெற்றி பெற்றது போன்று 2வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











