மும்பை : இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், அவர் மீது கடும் விமர்சனத்தை முன் வைத்து இருக்கிறார்கள் ஒரு பிரிவு ரசிகர்கள். அதில் பெரும்பாலும் விராட் கோலி ரசிகர்களே உள்ளனர். அவர்கள் விமர்சனமும் எல்லை மீறியதாக இருந்தது.

இதுவரை நடந்த ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் ரோஹித் சர்மா அணியின் வெற்றிக்கு ஒரு காரணம் என கூறும் அளவுக்கு ஒவ்வொரு போட்டியிலும் ரன் குவித்தார். ஆனால், ஒரே ஒரு போட்டியில் அவர் 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அவரை சிலர் கடுமையாக விமர்சனம் செய்து இருப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
ரோஹித் சர்மாவுக்கு இடது கை வேகப் பந்துவீச்சாளர்கள் என்றாலே விக்கெட்டை பறிகொடுக்கும் பலவீனம் உள்ளது. இலங்கை அணியில் இடது கை வேகப் பந்துவீச்சாளர்கள் இருந்ததால் அது குறித்து போட்டிக்கு முன்பே விமர்சகர்கள் குறிப்பிட்டு வந்தனர்.
அதே போல, இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்ய வந்த நிலையில், ரோஹித் சர்மா முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே பவுல்டு அவுட் ஆனார். முதல் பந்தில் ஃபோர் அடித்த அவர், அடுத்த பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
கடந்த ஆறு போட்டிகளில் 0, 135, 86, 48, 46, 87 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, இலங்கை அணிக்கு எதிராக நான்கு ரன்களில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து ரசிகர்கள் என்ற போர்வையில் சிலர் ட்விட்டரில் ரோஹித் சர்மாவுக்கு எதிராக மோசமான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
ஒருவர், இந்த உலகக்கோப்பை தொடரில் நான்கு சதங்கள் அடித்து இருக்கும் க்விண்டன் டி காக்குடன் ஒப்பிட்டு, அப்படி ஒரு துவக்க வீரர் தான் நமக்கு வேண்டும். இப்படி வந்த உடன் அவுட் ஆகும் ரோஹித் தேவையில்லை என கூறி இருக்கிறார். மற்றொரு விராட் கோலி ரசிகர், ரோஹித் சர்மாவால் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எதுவுமே செய்ய முடியாது. ஏன் டாஸ் கூட ஜெயிக்க முடியாது என விமர்சனம் செய்துள்ளார்.
ஒருவர் கோலி ரசிகராக இருக்கலாம். அதற்காக, ரோஹித் சர்மா ஏதோ ஒரு போட்டியில் சொதப்புவதை இப்படி மோசமாக விமர்சனம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கோலி டக் அவுட் ஆன போது ரோஹித் சர்மா நின்று ஆடி 87 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் என்பதையும் நாம் மறந்து விட முடியாது.