டென்ஷனே இல்லாமல் தூள் கிளப்புவேன்.. ஓவியா மாதிரியே பேசும் ஹர்திக் பாண்டியா!
கொழும்பு: களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதிரடியாக ஆடி அரை சதம் கடந்துள்ளார் ஹர்திக் பாண்டியா. இதன் மூலம், சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக முறுக்கிய முஷ்டியை அவர் இறக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி காலே நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி சரியாக 600 ரன்கள் குவித்து ஆல்அவுட்டானது.
இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிகபட்சமாக 190 ரன்கள் விளாசினார். புஜாரா 153 ரன்கள் குவித்தார். ரஹானே 57, அஸ்வின் 47 ரன்கள் குவித்தபோதிலும், இறுதி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா தனது வழக்கமான டிரேட் மார்க் வானவேடிக்கை ஷாட்டுகள் மூலம், இந்திய அணி 600 என்ற இமாலய இலக்கை அடைய உதவி செய்தார்.

அதிரடி ஆட்டம்
ஹர்திக் பாண்டியா 3 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் உதவியுடன் 49 பந்துகளில் அரை சதம் கடந்து அசத்தினார். 50 ரன்ககள் விளாசிய பாண்டியா, லஹிரு குமார பந்து வீச்சில் தனஞ்சயா டி சில்வாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவரது கடைசி கட்ட ரன் வேட்டை இந்திய அணிக்கு உற்சாகத்தை ஊட்டியது. சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக தனியொருவனாக போராடி அரை சதம் கடந்து சதம் நெருங்கும் வேளையில், ஜடேஜாவின் பெரும் தவறால் ரன் அவுட்டானவர் பாண்டியா. தனது ஃபார்மை அவர் டெஸ்ட் போட்டிக்கும் கடத்தி வந்துள்ளார்.

முதல் போட்டியில் கலக்கல்
பாண்டியாவுக்கு இதுதான் முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். கேப்டன் விராட் கோஹ்லியிடமிருந்து டெஸ்ட் அணி வீரருக்கான தொப்பியை நேற்று பெற்றுக்கொண்டார் பாண்டியா. 24 வயதாகும் பாண்டியாவுக்கு, இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது பெரும் கவுரவமாக உள்ளதாம். சிறு வயது முதலே இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பது லட்சியமாக இருந்ததாக கூறுகிறார் பாண்டியா.

பதற்றமேயில்லை
"டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக காலடி எடுத்து வைப்பது பெருமையாக உள்ளது. அதேநேரம், நான் பதற்றமடையவில்லை. நான் எப்போதுமே தேவையற்ற நெருக்கடிகளை தலைக்கு ஏற்றிக்கொள்வதில்லை. அதைத்தான் என்னுடைய நல்ல செயல்களில் ஒன்றாக பார்க்கிறேன். எனது ஆட்டத்தில் மட்டுமே நான் கவனம் வைப்பேன்" என்று பிக்பாஸ் பங்கேற்பாளர் ஓவியா மாதிரியே அசால்ட்டாக பேசுகிறார் ஹர்திக் பாண்டியா.

தம்பியுடையான் படைக்கு அஞ்சான்
ஐபிஎல் தொடரில் கலக்கிய ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் க்ருணுல் பாண்டியாவிடம், உங்களுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது குறித்து தெரிவித்தீர்களா என்ற கேள்விக்கு, நானும் சகோதரரும் தினமும் பேசுவோம். பேசாத நாள் என்பதே கிடையாது. எனவே இந்த விஷயம் அவருக்கு முதலில் தெரியும் என தெரிவித்துள்ளார் ஹர்திக் பாண்டியா.


Click it and Unblock the Notifications