பல்லகெலே: இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 487 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. ஷிகர் தவன், கே.எல்.ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 39.3 ஓவர்களில் 188 ரன்கள் குவித்தபோதும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால் இந்தியாவின் ரன் குவிப்பு வேகம் குறைந்தது.
இலங்கையின் பல்லகெலேவில் சனிக்கிழமை இந்தியா மற்றும் இலங்கையின் 3வது டெஸ்ட் போட்டி தொடங்கியது . டாஸ் வென்ற கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன், அதிரடியாக ஆடி சதமடித்தார். 123 பந்துகளில் 17 பவுண்டரிகளின் உதவியுடன் 119 ரன்கள் குவித்தார். லோகேஷ் ராகுல் 85 ரன்களுக்கு அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
இளம் ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 86 பந்துகளில் சதம் விளாசினார். 96 பந்துகளில் 7 இமாலய சிக்ஸர்களுடன் 8 பவுண்டரிகளை விரட்டி 108 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
சர்வதேச அரங்கில் ஹார்திக் பாண்டியா அடிக்கும் முதல் சதம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியில் 8-வது வரிசையில் களமிறங்கிய வீரர் அடித்த அதிவேக சதமாகவும் இது பதிவானது.
கேப்டன் விராட் கோஹ்லி 42, அஸ்வின் 31 ரன்கள் சேர்த்தனர். இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 122.3 ஓவர்களில் 487 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இலங்கை தரப்பில் லஷன் ஸன்டகன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மலின்டா 3, ஃபெர்னான்டோ 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.