மும்பை : இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு மரியாதை அளிக்கும் வகையில் அவரது சொந்த ஊரான மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் சிலை திறக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்கள் பலர் சச்சின் சிலையை பார்த்து குழம்பிப் போனார்கள்.
காரணம், அது பக்கவாட்டில் இருந்து பார்க்க அப்படியே ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் போலவே இருக்கிறது. தொலைக்காட்சி நேரலையில் காட்டப்பட்ட போதும் அந்த சிலையை பார்க்க ஸ்டீவ் ஸ்மித் சிலை போலவே இருந்தது. இதை அடுத்து சச்சின் ரசிகர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர்.
இதை அடுத்து சமூக ஊடகங்களில் கேலி, கிண்டல்கள் தூள் பறந்தன. பலரும் "சச்சின் முன்னிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஸ்டீவ் ஸ்மித் சிலையை திறந்து வைத்தார்" என் பதிவிட்டு அந்த சிலையை கிண்டல் செய்து வருகின்றனர்.

சச்சின் டெண்டுல்கர் மும்பையை சேர்ந்தவர். அவர் மும்பை மாநில அணியில் கிரிக்கெட் ஆடி தான் இந்திய தேசிய அணியில் தேர்வு பெற்றார். பின் இந்திய அணிக்காக அவர் படைத்த சாதனைகளை நாம் அறிவோம். இப்படி பல சாதனைகள் படைத்த சச்சின் டெண்டுல்கரை பெருமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மும்பை கிரிக்கெட் அமைப்பு சச்சினுக்கு சிலை வைக்க முடிவு செய்து கடந்த ஓராண்டாக அந்த பணிகள் நடந்தன.
ஆனால், கடைசியில் அந்த சிலை சச்சின் போலவே இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இனி அந்த சிலையை அகற்றவும் முடியாது என்பதால் இனி பல ஆண்டுகளுக்கு ஸ்டீவ் ஸ்மித் சிலை என ரசிகர்கள் கிண்டலுக்கு அந்த சிலை ஆளாகப் போவது தான் மிச்சம். எனினும், இது இளமைக் கால சச்சினை முன் மாதிரியாக வைத்து உருவாக்கப்பட்ட சிலை என சிலர் கூறி வருகின்றனர்
தற்போது விமர்சனம் எழுந்து வரும் நிலையில், அந்த சிலையில் ஏதும் மாற்றம் செய்வார்களா? அது சாத்தியமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.