கொழும்பு : இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் சிவம் துபே அவுட் கேட்டபோது அம்பயர் அவுட் தர மறுத்தார். அதற்கு பதிலாக வைடு கொடுத்து அதிர வைத்தார். சிவம் துபே அதை கண்டு அதிருப்தி அடைந்தார். எனினும், அம்பயர் முடிவை மாற்ற முடியாது என்பதால் பின்னர் இந்த விவகாரத்தை கைவிட்டார் கேப்டன் ரோஹித் சர்மா.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி கொழும்பு பிரேமதேசா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணியின் துவக்க வீரர் அவிஷ்கா பெர்னான்டோ 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 14 ரன்களிலும், சதிரா சமரவிக்ரமா 8 ரன்களிலும், சரித் அசலங்கா 14 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

இந்த போட்டியில் சிவம் துபே பகுதி நேர பந்துவீச்சாளராக அபாரமாக பந்து வீசி தனது முதல் சர்வதேச ஒரு நாள் போட்டி விக்கெட் வீழ்த்தினார். அவர் போட்டியின் 14 வது வீசிய போதுதான் அந்த அம்பயர் சர்ச்சை நடந்தது. அந்த ஓவரின் நான்காவது பந்தை சிவம் துபே வீசினார். பந்து பேட்டிங் செய்து கொண்டிருந்த பதும் நிசங்காவின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் வசம் சென்றது.
பந்து பேட்டில் பட்டது போல சத்தம் கேட்டதால் சிவம் துபே அதற்கு அவுட் கேட்டார். ஆனால், அம்பயர் அவுட் கொடுக்காமல் வைடு என சைகை செய்தார். பந்து பேட்டில் படவில்லை என்றால் நிச்சயமாக பேட்ஸ்மேன் காலில்தான் பட்டு இருக்க வேண்டும். அந்த அளவுக்கு சத்தம் கேட்டது. ஆனால், அம்பயர் அதை சரியாக கவனிக்காததால் அந்த பந்துக்கு வைடு என சைகை செய்தார்.
அதனால், அம்பயரின் தவறான முடிவை கணித்த சிவம் துபே அதிருப்தி அடைந்தார். இதற்கு ரிவ்யூ கேட்கலாமா? என கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேட்டார் துபே. எனினும், ஒருநாள் போட்டிகளில் வைடுக்கு ரிவ்யூ கேட்க முடியாது என்பதால் இந்த விஷயத்தை கேப்டன் ரோஹித் சர்மா கைவிட்டார். பின்னர் ரீப்ளேவில் பந்து பேட்ஸ்மேனின் பேடில் பட்டு செல்வது தெரிந்தது. அம்பயர் தவறாக வைடு கொடுத்தது நிரூபணமானது.