மும்பை : இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான போட்டியில் சுப்மன் கில் சிறப்பாக ஆடி 92 ரன்கள் குவித்தார்.
ஆனால், 8 ரன்களில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டதால் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பிய போது அவர் சோகமாக வெளியேறினார்.

அப்போது மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று கை தட்டி அவரை உற்சாகமூட்டினார்கள். ஆனால், அப்போது சாரா டெண்டுல்கர் எழுந்து நிற்பது தான் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் இந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவியது.
இலங்கை அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் ரோஹித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி - சுப்மன் கில் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தனர்.
சிறப்பாக ஆடிய சுப்மன் கில் இந்த ஆண்டில் 1400 ரன்களை கடந்து சாதனை புரிந்தார். தொடர்ந்து சதம் அடிக்க இருந்த அவர் 92 ரன்கள் எடுத்த நிலையில், மதுசங்கா பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சதம் அடிக்கும் வாய்ப்பு வெறும் 8 ரன்களில் பறிபோன நிலையில். சுப்மன் கில் சோகமாக வெளியேறினார். அப்போது விஐபி அறையில் இருந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்த சச்சின் டெண்டுல்கர் மகள் சாரா முதல் ஆளாக எழுந்து நின்று, சுப்மன் கில் 92 ரன்கள் அடித்ததை பாராட்டி கை தட்டினார்.
சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் ஜோடி காதலிப்பதாக சமூக ஊடகங்களில் நீண்ட காலமாகவே கிசுகிசுக்கப்பட்ட நிலையில், உலகக்கோப்பை போட்டிகளில் சாரா டெண்டுல்கர், சுப்மன் கில் ஆட்டத்தை ரசித்து வருவது அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இந்தப் போட்டியில், சுப்மன் கில்லை தொடர்ந்து விராட் கோலியும் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரும் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.