
புதிய தேதிகள்
முன்னதாக, இந்தியா - இலங்கை தொடர், ஜூலை 13ம் தேதி முதல் தொடங்குவதாக இருந்தது. ஆனால், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் மற்றும் அந்த அணியின் டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் போட்டித் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி வரும் ஜுலை 18ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜுலை 20ம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜுலை 23ம் தேதியும் நடைபெறுகிறது. அதேபோல், முதல் டி20 போட்டி ஜுலை 25ம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஜுலை 27ம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி ஜுலை 29ம் தேதியும் நடைபெறும் என்று புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டன. இந்த போட்டிகள் அனைத்தும் கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறுகிறது.

ராகுல் டிராவிட் கோச்
இந்த தொடருக்கான இந்திய 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ஷிகர் தவான் ( கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது.

செம டீம்
இந்நிலையில், முதல் போட்டிக்கான இந்திய அணியை ராகுல் டிராவிட் மற்றும் தவான் ஏறக்குறைய முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், ஓப்பனர்களாக ஷிகர் தவான் மற்றும் ப்ரித்வி ஷா களமிறங்குகின்றனர். மிடில் ஆர்டரில் சூர்ய குமார் யாதவ், மணீஷ் பாண்டே, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, க்ருனால் பாண்ட்யா, புவனேஷ் குமார், நவ்தீப் சைனி, யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய வீரர்கள் இடம் பெற உள்ளதாக தெரிகிறது.

சம்பள பிரச்சனை
இந்திய 'ஏ' அணி மிக வலிமையாக தேர்வு செய்யப்பட, மறுபக்கம் இலங்கை அணியோ பரிதாப நிலையில் உள்ளது. ஏற்கனவே, இலங்கை அணியில் குசல் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா மற்றும் நிரோஷன் டிக்வெல்லா ஆகிய மூன்று முக்கிய வீரர்கள், இங்கிலாந்தில் பயோ-பபுளில் மீறியதற்காக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு சீனியர் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸும் சம்பள பிரச்சனை காரணமாக இத்தொடரில் இருந்து விலகிவிட்டார். இந்நிலையில், இன்னொரு சீனியர் வீரரான திசாரா ஃபெரேராவும் இப்போது இத்தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ, மாஸான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications











