மும்பை : இந்திய அணியில் சரியாக ஆடாத இரண்டு வீரர்களுக்கு சூர்யகுமார் யாதவால் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை ஆறு லீக் போட்டிகளில் ஆடி அனைத்திலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை பெற்றுள்ளது.

இதனிடையே ஒரே ஒரு பின்னடைவாக ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயத்தில் லீக் சுற்று முடிவு முடியும் அவரை அணிக்கு திரும்ப முடியாத நிலையில் இருக்கிறார்.
பாண்டியா இல்லாத நிலையில் அணியில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டார். சூர்யகுமார் ஆல் - ரவுண்டர் இல்லை என்றாலும், பேட்டிங்கில் சிறப்பாக ஆடி இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட நிலைத்து நின்று ஆடாத நிலையில், சூர்யகுமார் யாதவ் நிதான ஆட்டம் ஆடி 49 ரன்கள் குவித்தார்.
சூர்யகுமார் யாதவ் அதிரடி பேட்ஸ்மேன். டி20 போட்டிகளில் அவர் வந்தாலே சிக்ஸ், ஃபோர் பறக்கும் என்ற நிலை உள்ளது. ஒருநாள் போட்டிகளிலும் அதே போல ஆடி வந்த உடன் விக்கெட்டை பறிகொடுத்து சொதப்பி வந்தார். ஆனால், உலகக்கோப்பை தொடரில் அவருக்கு கிடைத்த இரண்டு வாய்ப்புகளில் ஒரு முறை ரன் அவுட் ஆன நிலையில், மற்றொரு போட்டியில் சிறப்பாக ஆடி தன்னை நிரூபித்துள்ளார்.
தற்போது, ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பினாலும் சூர்யகுமார் யாதவை அணியில் தொடர்ந்து வைத்திருக்க வாய்ப்பு உள்ளது. அவருக்கு பதில் யாரை அணியில் இருந்து நீக்கலாம் என்ற கேள்வி எழுந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் பேட்டிங்கில் ஆறு முறை வாய்ப்பு பெற்றும் அதில் சரியாக ரன் குவிக்காத ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. அவர் பொறுப்பில்லாமல் ஷார்ட் பந்துகளில் ஷாட் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
ஒருவேளை பேட்டிங்கில் மாற்றம் செய்ய வேண்டாம் என கருதினால் பந்துவீச்சில் முகமது சிராஜ் நீக்கப்படலாம். அவர் கடந்த ஆறு போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பாண்டியாவும் வேகப் பந்துவீச்சாளர் என்பதால் சிராஜுக்கு மாற்றாக அவர் ஐந்தாவது பந்துவீச்சாளராக செயல்படுவார். ஸ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ் இருவருமே திறமையான வீரர்கள் என்றாலும் உலகக்கோப்பை தொடரில் பொறுப்பில்லாமல் ஆடி வருகிறார்கள். அதனாலேயே அவர்கள் நீக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.