மும்பை : விராட் கோலி தலையில் கை வைத்து சோகமாக அமர்ந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், இந்தியா இமாலய வெற்றியை பெற்ற போதும், விராட் கோலி போட்டியின் இடையே ஏன் சோகமாக அமர வேண்டும்?

விராட் கோலி இந்தப் போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அது மட்டுமே இதற்கு காரணம் இல்லை. கடந்த சில போட்டிகளாகவே சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்ய முயற்சி செய்து வருகிறார் விராட் கோலி.
ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 49 சதம் அடித்துள்ளார். விராட் கோலி தற்போது 48 சதம் அடித்துள்ளார். அவரது 48வது சதமும் இதே உலகக்கோப்பை தொடரில் தான் அடிக்கப்பட்டது. உலகக்கோப்பை தொடர் முடியும் முன் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைக்க கோலி முடிவு செய்துள்ளார் என்பது அவர் சதம் அடிக்க தவிப்பதில் இருந்தே தெரிகிறது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் கோலி டக் அவுட் ஆனார். அதற்கு முந்தைய போட்டியில் 95 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டார் கோலி. இப்படி தொடர்ந்து சதம் அடிக்கும் வாய்ப்பு நழுவிப் போன நிலையில் தான் இலங்கைக்கு எதிராக அந்த வாய்ப்பு கிடைத்தது.
ரோஹித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், களத்துக்கு வந்த விராட் கோலி நிலைத்து நின்று ஆடி 88 ரன்கள் சேர்த்தார். எனினும், 88 ரன்கள் சேர்த்த நிலையில் அவர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சதம் அடிக்கும் வாய்ப்பு பறிபோனது.
அதை அடுத்து வீரர்கள் அறைக்கு சென்ற அவர் சோகமாக அமர்ந்து இருந்தார். ஒரு கட்டத்தில் தன் தலையில் கை வைத்து அமர்ந்தார். அந்த வீடியோ காட்சி மற்றும் புகைப்படம் உடனடியாக இணையதளங்களில் பரவியது. கோலி ரசிகர்கள், தங்களின் ஆதர்ச நாயகன் இப்படி சோகமாக அமர்ந்து இருப்பதை காண முடியவில்லை என அவர்களிம் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இந்தப் போட்டியில் இந்தியா 357 ரன்கள் குவித்தது. அடுத்து அபாரமாக பந்து வீசி இலங்கை அணியை 55 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.