கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியாவுக்கும், இலங்கைக்கும் நடந்த ஆட்டம், உண்மையில் கிரிக்கெட்டிற்கான வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
நேற்றைய ஆட்டத்தில் இரு அணி வீரர்களும், தங்களுடைய அடுத்த தலைமுறை எப்படி இருக்கிறது என்பதை காட்டினர். இந்தியாவின் அடுத்த கேப்டனாக கருதப்பட்டு, பின்னர் அணியிலேயே இடம் இல்லாத நிலை ஏற்பட்ட கேஎல் ராகுல், மீண்டும் இந்த தொடர் மூலம் ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறார்.

கே.எல்.ராகுலின் பிரச்சனையாக இருந்து வந்தது மனநிலைதான். ஆனால் கடந்த இருபோட்டிகளாக அவரது மனநிலை சிறப்பாக இருப்பதாகத் தெரிகிறது.
அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறார், அணியில் அவருக்கான இடம் என்பது உறுதி கிடையாது, இது ஆசியக் கோப்பைத் தொடர் என்கின்ற வகையில், ஒவ்வொரு போட்டியும் மொத்தத் தொடருமே கடினமானதுதான். ஆக அவர் கடினமான நேரங்களில் சிறப்பாகச் செயல்படுவதற்கான மனநிலையை உருவாக்கிக் கொண்டுள்ளார் என்று புரிந்து கொள்ளலாம்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி இன்னிங்சை கட்டமைப்பது என்பது அடிப்படை வேலை. ஆனால் அதற்கு பேட்டிங் திறமையோடு, மனநிலையும் வலிமையாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். கே.எல்.ராகுலின் திறமை அவருக்கான வாய்ப்பை வாங்குகிறது, அவரது மனநிலையால் மட்டும்தான் அதைத் தக்கவைக்க முடியும். செய்வார் என்று நம்புவோம்!
இன்னொரு பக்கத்தில் இருபதே வயதான இலங்கையின் இளம் வீரர் வெல்லாலகே காட்டும் மனஉறுதியில் அசரடிக்கிறார். அவரது செயல், பேச்சு எல்லாமே இயல்பாகவே மனஉறுதியோடு இருக்கிறது.
இந்திய அணியின் தரமான ஐந்து பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கைப்பற்றுகிறார்,கொண்டாடுகிறார். ஆனால் அவருடைய கொண்டாட்டத்தில் எந்த ஆச்சரியத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை. ஏனென்றால் இந்த விக்கெட்டுகளை என்னால் கைப்பற்ற முடியும் என்று அவர் நம்புகிறார்.
மேலும் ஆட்டநாயகன் விருதில் "வெற்றி பெற்ற இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்!" என்று ஆரம்பிக்கிறார். எந்த இடத்திலும் வெற்றி என்பது தனக்கோ, தனது அணியினருக்கோ ஆச்சரியப்படத்தக்கது கிடையாது, தாங்கள் எப்போதும் அதற்கு தகுதியானவர்களாகவே இருக்கிறோம் என்பது அவரது உடல் மொழியாகவே இருக்கிறது. பிறகென்ன இலங்கை அணிக்கு நீண்ட நாட்கள் விளையாடக்கூடிய வீரர் மட்டுமல்ல, எதிர்கால கேப்டன் கிடைத்திருப்பதாகக் கூட வைத்துக் கொள்ளலாம்.
மேலும் ஒட்டுமொத்த போட்டியில் கே.எல்.ராகுல் பேட்டிங்கை எடுத்துக் கொண்டால், அந்த ஆடுகளத்தில் அவர் விளையாடிய கட் ஷாட்டுகள், அவர் சிங்கிள் தேடிய விதம், பார்ட்னர்ஷிப் உருவாக்கி இன்னிங்சை கட்டமைத்தது எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அது ஒரு தரமான சண்டை!
சமீபக்காலத்தில் இருப்பதைக் கொண்டு, புத்திசாலித்தனத்தோடு மிக வலிமையாக சண்டையிடக்கூடிய அணியாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இலங்கை இருக்கிறது.நேற்று சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில், சுழலை முறியடிக்க ஸ்வீப் ஷாட்டை அசலங்கா பயன்படுத்தினார்; சதீரா ஸ்டெப் அவுட் செய்து விளையாடினார்.
மிக அருமையான, தைரியமான திட்டம். இதற்கு அடுத்து வந்த தனஞ்செய டி சில்வா மற்றும் வெல்லாலகே என இந்தத் திட்டத்தில் இருந்தார்கள். தோல்வி அடைந்திருந்தாலும் வெற்றியை நோக்கிய பயணத்திற்கு அவர்களிடம் திட்டமிருந்தது. திட்டத்தைச் செயல்படுத்த அவர்கள் உழைத்தார்கள். ஆடுகளத்தைப் புரிந்துகொண்டதும் சனகா கேப்டனாக செயல்பட்ட விதம் மிக அருமை.
ஒரு போட்டி என்றால் வெற்றி தோல்வி இருந்தே தீரும். ஆனால் போட்டி எப்படி? நடைபெற்றது என்பதுதான் முக்கியம். இந்த வகையில் நேற்று நடைபெற்றது தரமான போட்டி. இரு அணிகளும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டார்கள்.