மும்பை : இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றிய நிலையில் இது சமீபிரதாய ஆட்டமாக தான் நடைபெற்றது.
இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா, ஆர்ஸ்தீப் சிங், அக்சர் பட்டேல் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு பதிலாக கலீல் அகமத், கில் ஆகியோர் அணிக்கு திரும்பினர். இந்த நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது.

தொடக்க வீரராக ஜெயிஸ்வால் மற்றும் கில் ஆகியோர் களமிறங்கினர். இந்திய அணிக்கு எப்போதுமே சுழற் பந்துவீச்சை எதிர்கொள்வது சமீப காலமாக பெரிய பிரச்சினையாக இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட விராட் கோலி போன்ற வீரர்கள் சமீப காலமாக போராடி வருகின்றனர்.
திறமை வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்தும் அந்த பழைய காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இந்த நிலையில் இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக கம்பீர் வந்திருப்பதால் இந்த சிக்கலை அவர் தீர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
கம்பீர் தலைசிறந்த ஸ்பின்னர்களை லாவகமாக எதிர் கொண்டு ரன்களை சேர்க்கும் வீரர். அவர் உலகக்கோப்பை பைனலில் கூட முரளிதரனின் பந்துவீச்சை எல்லாம் அசால்டாக எதிர்கொண்டார். இதனால் கம்பீர் இந்தியாவின் இந்த குறையை தீர்ப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே சுழற் பந்துவீச்சாளர் தீக்சனா ஓவர்- ஐ எதிர் கொள்ள முடியாமல் இந்திய அணி வீரர்கள் தடுமாறினர். இடது கை அதிரடி பேட்ஸ்மேனான ஜெய்ஷ்வால், தீக்சனா பந்தை எதிர்கொண்டு எல் பி டபிள்யூ ஆனார்.இதேபோன்று ரிங்கு சிங் இன்றைய ஆட்டத்தில் நான்காவது வீரராக களம் இறங்கினார். அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில் அவரும் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இதேபோன்று கடந்த போட்டியில் டக்கவுண்டான சஞ்சு சாம்சன் இன்றைய ஆட்டத்திலும் மீண்டும் டக் அவுட் ஆகி ரசிகர்களை வெறுப்பேற்றினார். இதனால் இந்திய அணி 14 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கம்பீர் வந்து ஒரு வாரம் தான் ஆகி இருப்பதால் இந்த பிரச்சனைகளை எல்லாம் அவர் கவனித்து தீர்ப்பார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.