கொழும்பு : ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு பத்தாவது முறையாக தகுதி பெற்றிருக்கிறது. சூப்பர் லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி தற்போது இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணி வீரர்கள் ஒரு நெருக்கடியான போட்டியை சந்தித்தார்கள். மேலும் ரசிகர்களுக்கும் நல்ல பொழுதுபோக்காக இந்த போட்டி அமைந்தது.

இந்த நிலையில் வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா இது நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு சிறந்த ஆட்டமாக அமைந்தது. இது போன்ற அழுத்தத்தை தரக்கூடிய போட்டியில் விளையாடுவது என்பதை எங்களுக்கு ஒரு சவால் தான். இது போன்ற ஆடுகளத்திலும் நாங்கள் விளையாட நினைத்தோம். அப்போதுதான் எங்களால் எப்படி செயல்பட முடிகிறது என்று எங்களுக்கு தெரியும். ஹர்திக் பாண்டியா தன்னுடைய பந்துவீச்சில் கடும் உழைப்பை செலுத்தி இருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருடைய பந்துவீச்சு நல்ல ஒரு முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் ஹர்திக் பாண்டியா ஓவர் வீசிய விதம் எனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியை கொடுத்தது. 213 ரன்களை தற்காத்துக் கொள்வது என்பது சுலபமான காரியம் கிடையாது. மேலும் ஆடுகளமும் மாலை நேரத்தில் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்தது.
எனினும் கடும் அழுத்தங்கள் இருந்த நிலையில் அதனை சமாளித்து தொடர்ந்து இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்து வீசினோம். இதேபோன்று குல்தீப் யாதவ் பிரமாதமாக பந்து வீசி இருக்கிறார். தன்னுடைய பந்துவீச்சும் முறைக்காக அவர் பெரிய அளவில் உழைப்பை செலுத்தி இருக்கிறார்.
அதற்கான விளைவுகளை தான் நாம் கடந்த 15 போட்டிகளாக பார்த்து வருகிறோம்.குல்தீப் இப்படி சிறப்பாக பந்து வீசுவதன் மூலம் எங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கிறது. இது நிச்சயம் இந்திய அணிக்கு நல்ல அறிகுறியாகும் என்று கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.