கொழும்பு : இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று கொழும்பு நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். இல்லையென்றால் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையிடம் ஒரு நாள் தொடரை இழக்கும்.
மோசமான சாதனையை இந்தியா படைக்கும் இந்த தொடரில் இந்திய அணி தோற்பதற்கு முக்கிய காரணம் பேட்டிங்கில் சொதப்புவது தான். 230- 240 போன்ற இலக்கை கூட ஷேஸ் செய்ய முடியாமல் இந்தியா தடுமாறுகிறது. ரோகித் சர்மாவை தவிர எந்த ஒரு வீரரும் பேட்டிங்கில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் இந்திய அணியில் நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 15 இன்னிங்ஸ்களாக ஒரே ஒரு முறை மட்டும் தான் அரைசதம் அடித்திருக்கிறார். குறிப்பாக டி20 உலக கோப்பை பைனலில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 76 ரன்கள் சேர்த்தார். ஆனால் அதிலும் ஸ்ட்ரைக் ரேட் ஒரு விமர்சனமாக வைக்கப்பட்டது.
எனினும் அதை தவிர்த்து பார்த்தால் விராட் கோலி பெரிய அளவில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. விராட் கோலி இந்திய அணியில் ரன் மிஷின் என்று ரசிகர்களால் அழைக்கப்படுவார். ஆனால் அந்த மிஷினில் ஏதோ கோளாறு ஏற்பட்டது போல் விராட் கோலி தற்போது தடுமாறி வருகிறார்.
குறிப்பாக இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. மூன்றாவது வீரராக களமிறங்கும் விராட் கோலி, கடைசி வரை நின்று எப்போதுமே சேஸிங்கை முடித்து கொடுப்பார். ஆனால் அப்படி ஒரு ஆட்டத்தை உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு விராட் கோலி இடம் இருந்து ரசிகர்களால் பார்க்க முடியவில்லை.
15 இன்னிங்ஸ்களாக விராட் கோலி எதுவும் செய்யாமல் உள்ள நிலையில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பார்வையில் இருந்து தப்பித்து இருக்கிறார். இதனால் விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் சதம் அடித்து தன்னுடைய பார்மை மீட்க வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. இதேபோன்று ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களும் பேட்டிங்கில் தடுமாறுவது இந்திய ரசிகர்களை எரிச்சல் அடைய செய்திருக்கிறது.