மும்பை : இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒரு நாள் தொடர் வரும் 27 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் கேப்டன் ஆகவும் ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மா கேப்டன் ஆகவும் செயல்படுகிறார்கள்.
முதலில் டி20 தொடர் நடைபெற உள்ள நிலையில் ஒரு நாள் தொடர் ஆகஸ்ட் இரண்டாம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை இந்திய அணியில் பிளேயிங் லெவனை தேர்வு செய்வது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் தற்போது இந்திய ஒரு நாள் அணியின் விக்கெட் கீப்பர் யார் என்று தேர்ந்தெடுப்பதில் மிகவும் கடினமான விஷயமாக இருக்கும். ஏனென்றால் கே எல் ராகுல் ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இதேபோன்று ரிஷப் பண்டும் தற்போது டி20 உலக கோப்பையில் விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார்.
இதனால் யாரை விடுவது யாரை சேர்ப்பது என்ற குழப்பம் நிச்சயம் இருக்கும். இந்த முடிவை எடுக்க கம்பீரு,ம் ரோகித் சர்மாவும் கஷ்டப்படுவார்கள்.தற்போது இந்திய அணி புதிய தலைமை கீழ் சென்று இருக்கிறது. இதனால் வீரர்கள் அனைவரும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது முக்கியமாகும். உங்கள் இரண்டு கைகளையும் வைத்து உங்களுக்கான வாய்ப்பை பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள் என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
இதேபோன்று விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 2027 ஆம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராபின் உத்தப்பா, இந்திய அணியின் சிறந்த சேவகர்களாக இருவரும் இருக்கிறார்கள். எனவே தாங்கள் எப்போது ஓய்வு பெறப் போகிறோம். எப்போது விளையாட போகிறோம் என்பது எல்லாம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் கைகளில் விட்டு விட வேண்டும்.
2027 ஆம் ஆண்டுக்கு இன்னும் பல ஆண்டுகள் இருக்கிறது. அதுவரை இரண்டு வீரர்களும் உடல் தகுதியுடன் இருப்பார்களா என்பதை பார்க்க வேண்டும். நிச்சயம் விராட் கோலி மீது உடல் தகுதி பிரச்சனை இருக்காது. ஆனால் அவர் மனதளவில் நல்ல நிலையில் இருக்கிறாரா இல்லை அயர்ந்து போய் விடுகிறாரா என்பதை எல்லாம் பார்க்க வேண்டும்.
அது மட்டும் இல்லாமல் இரண்டு வீரர்களும் இல்லை என்றாலும் மாற்று வீரர்கள் நிச்சயமாக இந்தியாவுக்கு கிடைப்பார்கள். அதுதான் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதம் ஆகும் என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.