வரும் 5ம் தேதி துவக்கம்
2020 துவங்கியுள்ள நிலையில், ஆண்டின் முதல் தொடராக இலங்கையுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியா வரும் 5ம் தேதி முதல் மோதவுள்ளது.
லசித் மலிங்கா கேப்டன்
3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் மோதுவதற்காக லசித் மலிங்கா தலைமையிலான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
16 மாதங்கள் இடைவெளி
இந்த அணியில் 16 மாதங்களுக்கு பிறகு அணியின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2018ல் தென்னாப்பிரிக்காவுடனான டி20 போட்டியில் இவர் சிறப்பான ஆட்டத்தை தர தவறியது குறிப்பிடத்தக்கது.
கவுஹாத்தியில் துவக்கம்
இந்தியா மற்றும் இலங்கை அணியினர் மோதவுள்ள இந்த தொடரின் முதல் போட்டி கவுஹாத்தியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி 7ம் தேதியும் 3வது போட்டி 10ம் தேதியும் முறையே இந்தூரிலும் பூனாவிலும் நடைபெறவுள்ளது.
16 இலங்கை வீரர்கள்
லசித் மலிங்கா தலைமையில் இலங்கை அணியில் குணதிலகா, பெர்ணான்டோ, மாத்யூஸ், ஷனகா, பெராரா, திக்வெல்லா, தனஞ்செயா டி சில்வா, உதானா, ராஜபக்ஷா, பெர்ணான்டோ, ஹசரங்கா, குமாரா, மென்டீஸ், சந்தகன் மற்றும் ரஜிதா ஆகிய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வெற்றி முனைப்பில் இந்தியா
2020ன் முதல் தொடராக இலங்கையுடனான இந்த சர்வதேச டி20 தொடர் அமைந்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுடனான கடந்த ஆண்டின் இறுதி தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், ஆண்டின் முதல் தொடரான இலங்கையுடனான இந்த சர்வதேச டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.