IND vs SL: 9 ஆண்டுக்கு பிறகு இலங்கையில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்தியா.. அட்டவணை அறிவிப்பு
கொழும்பு: 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளின் ஒரு பகுதியாக, வரும் ஆகஸ்ட் மாதத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்தவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.
இத்தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பில் உள்ள SSC மைதானத்திலும் நடைபெறவுள்ளன. இரு போட்டிகளும் இந்திய நேரப்படி காலை 10:00 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இதுவரை இரண்டு முறை தகுதி பெற்றும் கோப்பையை வெல்ல தவறிய இந்திய அணி, தற்போது புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இலங்கை அணி அதற்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தில் நீடிக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்திய அணிக்கு தோராயமாக 5 முதல் 10 சதவீத வாய்ப்புகளே உள்ள நிலையில், இனிவரும் போட்டிகளில் மேலும் சரிவுகளைச் சந்திக்க முடியாத கட்டாயத்தில் அணி உள்ளது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் கடினமான போராட்டத்திற்குப் பிறகு 2-2 என தொடரை சமன் செய்ததோடு, சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் வென்று சாதகமான தொடக்கத்தைக் கண்டது. இருப்பினும், கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான முழுமையான தோல்வி (ஒயிட்வாஷ்) அந்த வேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இது, தரமான சுழற்பந்து வீச்சுக்கு எதிரான இந்தியாவின் பேட்டிங் பலவீனத்தையும், சொந்த அணியின் சுழற்பந்து வீச்சுத் துறையின் போதிய பலமின்மையையும் அம்பலப்படுத்தியது. இதற்கு ஐபிஎல் தொடரின் மைதானங்களும், டெஸ்ட் போட்டிகளுக்குத் தேவையான போதிய பயிற்சி நேரமின்மையுமே முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கையின் ஆடுகளங்களில், அந்நாட்டின் பலம் வாய்ந்த சுழற்பந்து வீச்சு கூட்டணி இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதால், இந்த பலவீனங்கள் மீண்டும் உற்றுநோக்கப்படும்.
தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் இந்தத் தொடர் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். தனது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் transition என்ற வார்த்தையை அவர் நிராகரித்த நிலை மாறி, விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற மூத்த வீரர்களின் ஓய்வு அணியில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறி தற்போது அதையே காரணமாக கூறி வருகிறார்.
இந்திய அணி கடைசியாக 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடருக்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

