2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பைத் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்புச் சாம்பியனான இந்தியா, தனது பட்டத்தைப் தற்காக்கும் முயற்சியில் களமிறங்கி உள்ளது. போட்டிக்கு முன்னதாக வான்கடே மைதானத்தில் கண்கவர் தொடக்க விழா நடைபெற்றது. இசைக் கலைஞர்களான ரிஷப் ஷர்மா மற்றும் சிவமணி ஆகியோர் தங்கள் இசை நிகழ்ச்சிகளால் ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா மற்றும் முன்னாள் இந்திய கேப்டனும், உலகக் கோப்பை தூதுவருமான ரோஹித் ஷர்மா ஆகியோர் கோப்பையுடன் மைதானத்திற்கு வந்தனர். கடந்த முறை இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற ரோஹித், கோப்பையை மேடையில் வைத்தார்.

இதனையடுத்து நடைபெற்ற டாசில் அமெரிக்க அணி கேப்டன் மோனாங்க் படேல் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இது குறித்து பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், “நாங்கள் முதலில் பேட் செய்யவே விரும்பினோம். ஆடுகளம் நன்றாக உள்ளது. இங்கு நிறைய விளையாடியுள்ளேன். ஒபனிப்பொழிவு அதிகம் இருக்காது என நினைக்கிறேன்” என்றார்.
“சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் விளையாடுவது ஒரு சிறிய அழுத்தம் தான். ஆனால், நாங்கள் எப்போதும் விளையாடி வரும் அதே பாணியில் கவனம் செலுத்துவோம். நேற்று இரவு அணிக்கு ஒரு நல்ல பயிற்சி இருந்தது. இந்த ஆடுகளம் அடுத்த 40 ஓவர்களுக்கும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார். இந்திய அணியை பொறுத்தவரை பும்ராவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதில் சிராஜ் களமிறங்கி உள்ளார். சஞ்சு சாம்சனுக்கு பதில் இஷான் கிஷன் தொடக்க வீரராக விளையாட உள்ளார்.
முன்னதாக பேசிய அமெரிக்க கேப்டன் மோனாங்க் படேல் , “இது ஒரு சிறந்த ஆடுகளம் போல் தெரிகிறது. இங்கு அதிக ரன்கள் குவிக்கப்படும். நாங்கள் இலக்கை விரட்ட முயற்சிப்போம், ஏனெனில் நாங்கள் என்ன இலக்கை அடைகிறோம் என்று அறிவோம். உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக இருப்பது ஒரு சிறந்த உணர்வு, அதிலும் இந்தியாவில். இங்கு வந்து விளையாடுவது பல வீரர்களுக்கு ஒரு கனவு நனவாகும் தருணம்” என்றார்.
“நாங்கள் எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை இந்த மண்ணில்தான் தொடங்கினோம், இப்போது அமெரிக்காவை பிரதிபலிக்கிறோம் என்பது ஒரு அற்புதமான உணர்வு. டி.ஒய். பாட்டீல் ஸ்டேடியத்தில் நாங்கள் சில பயிற்சி ஆட்டங்களில் விளையாடினோம், அது எங்களுக்கு நல்ல அனுபவத்தை அளித்தது. அணியின் கலவையைப் பொறுத்தவரை, நாங்கள் ஆறு பேட்ஸ்மேன்கள், இரண்டு ஆல்-ரவுண்டர்கள் மற்றும் மூன்று முன்னணி பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறோம்” என்று விவரித்தார்.