2026 டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா 300 ரன்கள் குவிக்கும் என முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், கணித்திருந்தார். மும்பை வான்கடே மைதானப் போட்டி குறித்து, டாஸுக்குப் பிறகு '300 loading' என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தியா தடுமாறியதால், தன் முடிவை அவர் மாற்றி கொண்டார்.
இந்திய அணியின் அதிரடி பேட்டிங், குறிப்பாக பவர்பிளேயில் அவர்களது ஆட்டம், இந்த உலகக் கோப்பையில் 300 ரன்கள் இலக்கை இந்தியா எட்டும் என பல முன்னாள் வீரர்களை கணிக்க வைத்தது. 2024 இல் வங்கதேசத்திற்கு எதிராக 297, நியூசிலாந்திற்கு எதிராக 271 ரன்கள் என புளூ படை குவித்துள்ளது.

இதற்கிடையில், மும்பையில் இந்தியா 300 ரன்கள் எடுக்கும் என ஸ்டெய்ன் மீண்டும் கருத்து தெரிவித்தார். ஆனால், இந்தியா தடுமாற, ஒரு ரசிகர் அவரிடம் இப்போதும் அதே கருத்தில் தான் இருக்கிறீர்களா எனக் கேட்டார். அதற்கு ஸ்டெய்ன், "Combined" இரு அணியையும் சேர்த்து என்று நகைச்சுவையாகப் பதிலளித்தார்.
அமெரிக்க கேப்டன் மோனங்க் படேல் டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக அமெரிக்கப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசி, பவர்பிளேயில் இந்தியாவை 46 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழக்கச் செய்தனர்.
விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்தபோதும், சூர்யகுமார் யாதவ் தனி ஒருவராக ஒரு தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் குவித்து ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக, இடதுகை வேகப்பந்து வீச்சாளர் சௌரப் நேத்ராவல்கரை அவர் கடுமையாகத் தாக்கினார்.கடைசி ஓவரில் இரண்டு பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்களை நேத்ராவல்கர் விட்டுக்கொடுக்க, இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எட்டியது. இந்தப் போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.