மும்பை: டி20 உலக கோப்பையில் தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை இந்திய அணி எதிர்கொண்டது. மும்பையில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்தியத் தொடக்க வீரர்களான இஷான் கிஷன், அபிஷேக் சர்மா ஆரம்பத்திலிருந்தே தடுமாறினர்.
நியூசிலாந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிரடி காட்டிய இஷான், அபிஷேக் ஜோடி, பேட்டிங்கிற்குச் சாதகமான மைதானத்தில் 'கத்துக் குட்டி' அமெரிக்காவுக்கு எதிராக எளிதில் ரன் குவிப்பார்கள் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், கட்டுக்கோப்புடன் பந்து வீசிய அமெரிக்க வீரர்கள் ஸ்டம்புகளை இலக்காகக் கொண்டு பந்துவீசி கடும் நெருக்கடி அளித்தனர்.

அவர்களின் துல்லியமான பந்துகளால் பவுண்டரிகள் அடிக்க முடியாமல் இரு இந்திய வீரர்களும் திணறினர். இந்நிலையில், டி20 உலகில் நம்பர் ஒன் வீரரான அபிஷேக் சர்மா, தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். உலகக் கோப்பையின் அழுத்தம் அவரது ஆட்டத்தைப் பாதித்திருக்கலாம் என்ற கிரிக்கெட் வல்லுனர்கள் விமர்சித்துள்ளனர்.
இதே போன்று இசான் கிஷன் அதிரடி காட்ட முயன்றார். 2 சிக்சர், 1 பவுண்டரி அடித்து 16 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா 16 பந்துகளில் 25 ரன்கள் எடுக்க, சிவம் துபே 1 ரன்னில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 46 ரன்கள் சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
உலகக் கோப்பையில் இந்தியாவின் இளம் படை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தனர். சாதாரணப் போட்டிகளுக்கும் உலகக் கோப்பைக்கும் உள்ள வேறுபாட்டை இளம் வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும்.