மும்பை: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் வெற்றியை பெற்றாலும் அமெரிக்க அணி கொஞ்சம் பயத்தை காட்டி இந்திய ரசிகர்களின் வயிற்றை கலக்க வைத்தது. முதல் நாளில் முதல் லீக ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு நெதர்லாந்து தண்ணீர் காட்டிய நிலையில் இந்திய அணியும் தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் யாருமே எதிர்பாராத வகையில் தடுமாறியது.
மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி பேட்டிங்கில் 250 ரன்களுக்கு மேல் குவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ ஆண்டி கிளைமாக்ஸ் ஆக மாறிவிட்டது.

அபிஷேக் ஷர்மா கோல்டன் டக் ஆகி வெளியேற இசான் கிஷன் 20 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா 25 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இந்த சூழலில் சிவம் துபே கோல்டன் டக் ஆகி வெளியேற இந்திய அணி 46 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும், மறுபக்கம் கேப்டன் சூரியகுமார் யாதவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டார். எனினும் ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா அக்சர் பட்டேல் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். எனினும் மறுபக்கம் சூரியகுமார் யாதவ் தன்னுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தார். இதில் 10 பவுண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும்.
இதன் மூலம் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் என்ற கௌரவமான இலக்கை எட்டியது. சிறப்பாக பந்து வீசிய ஷார்ட்லி நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை அடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்க அணி களமிறங்கியது.இந்திய பவுலர்களும் ஆரம்பத்தில் தங்களுடைய அபார பந்துவீச்சை வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் அமெரிக்க அணி 13 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மெலிந்த் குமார் மற்றும் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அபாரமாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். மெலிந்த் குமார் 34 ரன்களில் ஆட்டம் இழக்க அதன் பின் களமிறங்கிய சுபம் ராஞ்சே இரண்டு பவுண்டரி,இரண்டு சிக்சர் என பட்டையை கிளப்பினார்.
எனினும் மற்ற வீரர்கள் அவருக்கு துணை நிற்கவில்லை. இதனால் அமெரிக்க அணியால் இந்தியாவின் ஸ்கோரை எட்ட முடியாமல் போராடி தோல்வியை தழுவியது. பலம் வாய்ந்த இந்திய அணிக்கு அமெரிக்கா அணி கொடுத்த நெருக்கடி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதனால் பலரும் அமெரிக்க அணியின் இந்த செயல்பாட்டை பாராட்டியுள்ளனர். கடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை அமெரிக்கா வீழ்த்திய நிலையில் இம்முறையும் அது நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை அதிகமாக இருக்கும் இந்திய அணிக்கு இது ஒரு wake up call ஆக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.