ஓசி டிக்கெட் பத்தலை.. எப்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் போட்டி நடக்குதுன்னு பாக்குறேன்?
மும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வரும் அக்டோபர் 4 முதல் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது.
அக்டோபர் 21 முதல் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி வரும் அக்டோபர் 24 மத்திய பிரதேசத்தின் இந்தோர் நகரில் நடைபெற உள்ளதாக அட்டவணை வெளியிடப்பட்டது.
தற்போது மத்திய பிரதேச கிரிக்கெட் அமைப்பு தங்களுக்கு கிடைக்கும் இலவச டிக்கெட்கள் போதவில்லை. பிசிசிஐ விரைவில் பதில் வழங்காவிட்டால் இங்கே போட்டி நடைபெறுவது சந்தேகம் என கூறியுள்ளது.

பிசிசிஐ விதிகள் என்ன?
பிசிசிஐ விதிகள் படி இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கு மைதானத்தின் மொத்த பார்வையாளர் இடங்களில் 10 சதவீதம் மட்டுமே இலவச டிக்கெட்களாக எடுத்துக் கொள்ளலாம். மீதம் உள்ள 90 சதவீத டிக்கெட்கள் பொது மக்கள் விற்பனைக்கு ஒதுக்க வேண்டும். 10 சதவீத இலவச டிக்கெட்களில் பிசிசிஐ-க்கும் பங்கு பிரித்து கொடுக்க வேண்டும் என தெரிகிறது. அதுதான் இப்போது பிரச்சனையாக வெடித்துள்ளது.

இந்தோரில் எத்தனை டிக்கெட்கள்?
இரண்டாம் ஒருநாள் போட்டி நடைபெற உள்ள இந்தோர் மைதானத்தில் 27000 இருக்கைகள் உள்ளன. அதன்படி பார்த்தால், அந்த மாநில கிரிக்கெட் அமைப்பிற்கு 2700 டிக்கெட்கள் கிடைக்கும். பெவிலியன் எனப்படும் சிறப்பு பார்வையாளர்கள் அமரும் பகுதியில் 700 இருக்கைகள் உள்ளன. இதில் பாதி இருக்கைகளை பிசிசிஐ கேட்கிறது என குற்றம் சாட்டுகிறது மத்திய பிரதேச கிரிக்கெட் அமைப்பு.

அமைப்பு சொல்வது என்ன?
மத்திய பிரதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவர் மிலிந்த் கன்மாடிகர் கூறுகையில், "நாங்களும் இலவச டிக்கெட் விஷயத்தில் உறுப்பினர்கள் மற்றும் அரசு அமைப்புகளின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். சிறப்பு பார்வையாளர் பகுதி தவிர்த்து பிற இடங்களில் நாங்கள் பிசிசிஐ கேட்கும் ஐந்து சதவீத இலவச டிக்கெட்களை வழங்குகிறோம்" என தெரிவித்தார். பிசிசிஐ இந்த விஷயத்தில் விரைந்து பதில் அளிக்காமல் தாமதப் படுத்தி வருகிறது எனவும் குற்றம் சாட்டினார்.

பழி வாங்குகிறார்
இது பற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாங்கள் போட்டியை மாற்ற விரும்பவில்லை. ஆனால், அவர்கள் பிரச்சனை செய்தால் நாங்கள் வேறு இடத்திற்கு சென்று விடுவோம். இது மிலிந்த் கன்மாடிகர் செய்யும் ப்ளாக்மெயில். 2017இல் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் சென்ற போது கிரிக்கெட் நிர்வாக கமிட்டியின் தலைவர் வினோத் ராய், மாநில கிரிக்கெட் நிர்வாகிகள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் இடம் பெறக் கூடாது என கூறிவிட்டார். அப்போது மிலிந்த் கன்மாடிகர் வெஸ்ட் இண்டீஸ் செல்ல முடியவில்லை. அதை மனதில் வைத்தே இப்படி பழி வாங்குகிறார் அவர்" என கூறினார்.
என்னமோப்பா.. காசு நிறைய புழங்குது.. ஆனாலும், இப்படி சின்ன விஷயத்துக்கு அடிச்சுக்கிறீங்க.


Click it and Unblock the Notifications