கயானா : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று கயானாவில் நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு டி20 போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றது.
இதன் மூலம் இன்றைய போட்டியில் வென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை வென்று விடும். இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி எந்த ஒரு தொடரையும் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு வென்றது கிடையாது.

இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வரலாற்றை மாற்றும் வாய்ப்பு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிடைத்திருக்கிறது.முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி வாய்ப்பில் இருந்தும் தோல்வியை தழுவி இருக்கிறது. இதற்கு காரணம் ஹர்திக் பாண்டியாவின் தவறான கொள்கைகள் மற்றும் முடிவு தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்திய அணியில் தற்போது ஆறு பேட்ஸ்மேன்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்.
இதில் இஷான் கிஷன்,கில்,சஞ்சு சாம்சன் ஆகிய மூன்று பேர் சரியாக விளையாடுவதில்லை. சூரிய குமார் யாதவும் தன்னுடைய பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார். இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் இசான் கிஷனுக்கு ஓய்வு வழங்கப்பட்டு ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைப்போன்று கடந்த போட்டியில் 31 ரன்களை விட்டுக் கொடுத்த ரவி பிஸ்னாய் எந்த விக்கெட்டையும் எடுக்காததால் அவருக்கு பதில் குல்தீப் யாதவும் அணிக்கு திரும்பலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது டி20 போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட அதே மைதானம் தான் இன்றும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்து பேட்டிற்கு சரிவர வராததால் இந்திய அணி பேட்ஸ்மேன்களும் தடுமாறுகின்றனர்.
இன்றைய ஆட்டத்திலும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக தான் ஆடுகளம் செயல்படும் என தெரிகிறது. ஆனால் இரண்டாவது டி20 போட்டியில் அக்சர் பட்டேலுக்கு ஒரு ஓவர் கூட வழங்காமல் ஹர்திக் பாண்டியா தவறு செய்துவிட்டார் இந்த தவறிலிருந்து அவர் பாடம் கற்றுக் கொள்வாரா இல்லை பிடிவாதமாக, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான் என்று சொல்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.