
யாருக்கெல்லாம் தொற்று உறுதி
இந்திய அணியின் முதன்மை தேர்வுகளாக இருந்த ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோருக்கு தான் கொரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அணி ஊழியர்கள் 3 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கைகள் அதிகரிக்கலாம் என்பதால் ஒட்டு மொத்த அணியும் குவாரண்டைன் செய்யப்பட்டு, போட்டியே ஒத்திவைக்கப்படுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா நுழைந்தது எப்படி
இந்நிலையில் இந்திய அணிக்குள் ஒரே நேரத்தில் 6 பேருக்கு தொற்று ஏற்பட, பிசிசிஐ செய்த சிக்கனம் தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்திய அணி வீரர்கள் அனைவரும் கடந்த 1ம் தேதியன்று அகமதாபாத்தில் ஏற்படுத்தப்பட்ட பயோ பபுளுக்குள் வந்தடைந்தனர். ஆனால் அவர்கள் எப்படி அங்கு செல்வது என்தில் தான் பிசிசிஐ சிக்கனம் காட்டியது.

பெரும் தவறு
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒவ்வொரு முக்கிய நகரத்திற்கும் தனி விமானம் அனுப்பப்பட்டு அழைத்து வந்தனர். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக வீரர்களுக்கு விமான ஏற்பாடு கூட செய்யப்படவில்லை. அனைவரையும் தங்களது தனிப்பட்ட முறையில் ஏதேனும் பயணிகள் விமானத்தில் வந்துக்கொள்ளுமாறும், தனி விமானம் தர முடியாது என்றும் பிசிசிஐ கூறிவிட்டது.

பரபரப்பு குற்றச்சாட்டுக்கள்
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில் வெவ்வேறு நகரங்களில் இருந்து வரும் வீரர்களால் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இதனை சிறிது கூட யோசிக்காத பிசிசிஐ, பணத்தை சிக்கனம் செய்ய விமான சேவை இல்லையென மறுத்துவிட்டது. இதுவே அணிக்குள் கொரோனா பரவல் ஏற்பட காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்கு தகுந்த பதில் கிடைக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











