டெல்லி: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் கடைசி சில நிமிடங்களில் இந்திய கேப்டன் சுப்மன் கில் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் டெவின் இம்லாச் பயங்கரமாக மோதிக்கொண்ட சம்பவம், பதற்றத்தை ஏற்படுத்தியது. "ரக்பி (Rugby)" விளையாட்டில் வீரர்கள் மோதிக் கொள்வதை போல இருந்தது இந்த நிகழ்வு. இருவரும் நிலைகுலைந்தனர். அதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 318 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆட்டத்தின் 85-வது ஓவரில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் லெக் சைடில் பந்தை தட்டிவிட்டு ஒரு ரன்னுக்கு ஓடினார். ஃபீல்டர் பந்தை எடுத்து கீப்பர் முனைக்கு வீசியபோது, அந்த த்ரோ இலக்கைத் தவறிச் சென்றது. நான்-ஸ்டிரைக்கர் முனையில் இருந்த சுப்மன் கில்லும், பந்தைப் பிடிக்க வந்த விக்கெட் கீப்பர் டெவின் இம்லாச்சும் ஒரே நேரத்தில் பந்தை நோக்கி நகர, சற்றும் எதிர்பாராத விதமாக இருவரும் பலமாக மோதிக்கொண்டனர். இந்த மோதல், பார்ப்பதற்கு ரக்பி விளையாட்டில் எதிரணி வீரரைத் தடுக்கும் 'டேக்கிள்' (Tackle) செய்வது போலக் காட்சியளித்தது.
மோதிய வேகத்தில் இருவரும் வலியால் துடித்து, மைதானத்திலேயே நிலைகுலைந்து அமர்ந்தனர். உடனடியாக இரு அணி வீரர்களும் அவர்களைச் சூழ்ந்துகொள்ள, பிசியோதெரபிஸ்ட்டுகள் களத்திற்குள் விரைந்தனர். அப்போது, மறுமுனையில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், தனது கேப்டன் கில்லுக்கு ஏதேனும் தலையில் அடிபட்டுள்ளதா என்பதைச் சோதிக்க, அவரே ஒரு மருத்துவர் போல செயல்பட்டார்.
கில்லின் முகத்திற்கு நேராகத் தனது விரல்களைக் காட்டி, "நான் எத்தனை விரல்களைக் காட்டுகிறேன்?" என்று ஜெய்ஸ்வால் கேட்ட காட்சி, மைதானத்தில் இருந்த அனைவரையும் நெகிழச் செய்தது. ஒரு வீரராக சக வீரரின் நலனில் அவர் காட்டிய அக்கறை அனைவரின் பாராட்டையும் பெற்றது. நல்ல வேளையாக, இருவருக்கும் பெரிய அளவில் காயம் ஏதும் ஏற்படவில்லை. சுமார் ஐந்து நிமிட மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
இந்தச் சம்பவத்தின்போது வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப், "உருவத்தில் பெரியவரான சுப்மன் கில்லால், கீப்பர் வெளியேற்றப்பட்டார்" என்று குறிப்பிட்டார். அதே சமயம், முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா, இந்த மோதலை ஒரு "சரியான ரக்பி டேக்கிள்" என்று வர்ணித்தார். "இருவரும் மோதிக்கொண்ட கோணம் மிகவும் மோசமாக இருந்தது," என்று அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார்.
முதல் நாள் ஆட்டம் இந்தியாவின் முழு ஆதிக்கத்தில் இருந்தாலும், இறுதியில் நடந்த இந்த மோதல் சம்பவம், சில நிமிடங்கள் மைதானத்தில் ஒருவித பதற்றத்தை உருவாக்கியது. ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும், சுப்மன் கில் 20 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.