மும்பை: இந்திய கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் இளம் தலைமுறையை நோக்கி நகர உள்ளது. இந்த நிலையில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற துவக்க வீரர் ரோஹித் சர்மாவின் இடத்தை இளம் வீரர் அபிஷேக் சர்மா நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவரும் ரோஹித் சர்மாவைப் போன்றே எந்த பிட்ச்சிலும் அதிரடியாக ஆடக் கூடியவர். மேலும், சுழற் பந்துவீச்சாளராகவும் அசத்தக் கூடியவர்.
கடந்த 2024 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரராக ஆடிய அபிஷேக் சர்மா தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அவர் 16 போட்டிகளில் 484 ரன்கள் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 204 என்பது குறிப்பிடத்தக்கது. 16 போட்டிகளில் அவர் 42 சிக்ஸ் மற்றும் 36 ஃபோர் அடித்து இருந்தார். அதாவது அவரது ஃபோர் எண்ணிக்கையை விட சிக்ஸ் எண்ணிக்கை அதிகம் என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கடந்த 2018 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் இந்த முறை தனது ஆட்டத்தை மாற்றி உச்சகட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார். இதற்கு முன் அவரது அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் 144 மட்டுமே. அதை முறியடித்து அதிரடி ஆட்டத்தில் வேறு ஒரு கட்டத்துக்கு சென்றிருக்கிறார். எனவே, அவரை இந்திய டி20 அணியில் தேர்வு செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர் இடது கை சுழற் பந்துவீச்சாளரும் ஆவார். அதிலும் விக்கெட் வீழ்த்தும் ஆற்றல் கொண்டவராக இருக்கிறார். இந்த நிலையில் ஜிம்பாப்வே தொடரில் அபிஷேக் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை ஆடி ரன் குவித்தால் இந்திய அணியில் இடம் பெற காத்துக் கொண்டு இருக்கும் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் இடத்தை பறித்து விடுவார். வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கும் மற்றொரு துவக்க வீரரான வலது கை பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவர் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.
சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரராக அபிஷேக் சர்மா சிறப்பாக செயல்படுவார், அவரை விட ஒரு படி மேலே அதிரடி ஆட்டத்தில் கலக்குவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டால் இனி இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார்.