ஹாராரே : ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டி20 உலக கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி தற்போது ஜிம்பாப்வே செல்கிறது.ஆனால் டி20 உலக கோப்பையில் பங்கேற்ற எந்த ஒரு வீரரும் இந்த தொடரில் பங்கு பெறவில்லை.
இது போன்று சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகிய மூன்று வீரர்களும் ஓய்வு பெற்றுவிட்டனர். இதனால் இந்த தொடர் இந்திய டி20 அணியில் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. கில் தலைமையில் இந்திய அணி ஜிம்பாப்வேவில் விளையாடுகிறது.

இந்த நிலையில் முதல் டி20 போட்டி சனிக்கிழமை ஹராரேவில் இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு நடைபெறும். இந்தப் போட்டியில் இந்தியாவின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். தொடக்க வீரராக சுப்மன் கில் தான் களமிறங்க போகிறார். அவருக்கு ஜோடி யார் என்று கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது.
சாய் சுதர்சன் தொடக்க வீரராக இருப்பாரா இல்லை ருதுராஜ் அவருக்கு ஜோடியாக இருப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது. விராட் கோலி தற்போது ஓய்வு பெற்றுள்ளதால், ருதுராஜ் நம்பர் மூன்றாவது இடத்திற்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. நான்காவது வீரராக ராஜஸ்தான் ராயல்ஸை சேர்ந்த ரியான் பராக்கிற்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
ஐந்தாவது வீரராக அதிரடி நட்சத்திரம் ரிங்கு சிங் இந்த தொடரில் களமிறங்க போகிறார். ஆறாவது வீரராக துருவ் ஜூரல் அல்லது ஜித்தேஷ் சர்மா என இரண்டு விக்கெட் கீப்பர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஏழாவது வீரராக அபிஷேக் ஷர்மா அல்லது வாஷிங்டன் சுந்தர் என இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
எட்டாவது வீரராக சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாய் விளையாடக்கூடும். இதன் அடுத்து மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெறுவார்கள். இதில் கலீல் அகமத், ஆவேஷ் கான், துஷார் தேஷ் பாண்டே அல்லது முகேஷ் குமார் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஐந்து டி20 போட்டிகள் இருப்பதால் பிளேயிங் லெவன் அடிக்கடி மாறக்கூடும். இந்த தொடரில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களுமே ஒரு போட்டியிலாவது நிச்சயம் விளையாடும் வகையில் பிளேயிங் லெவன் தேர்வு செய்யப்படும் என தெரிகிறது.