மும்பை : தற்போது நடைபெற்று வரும் 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி ஜிம்பாப்வே செல்ல உள்ளது. அங்கு நடக்க உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது. அதில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் பலரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், ஏற்கனவே இந்திய டி20 அணியில் இடம் பெற்று வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹருக்கு இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த ஓராண்டாகவே இந்திய டி20 அணியில் இடம் பெற்று வந்தார். இடையே அவருக்கு காயம் ஏற்பட்டதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். பின்பு மீண்டும் 2023ஆம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரின் போது அணியில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரது தந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால், அவர் மீண்டும் அணியில் இருந்து விலகினார்.

அதன் பின், 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டார். அப்போது அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் அவரை இந்திய டி20 அணியில் இருந்து நீக்கி உள்ளது பிசிசிஐ. அவர் தொடர்ந்து அணியில் இடம் பெறாமல் போனதும், அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதுமே அவரை அணியில் இருந்து நீக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜிம்பாவே தொடருக்கான இந்திய அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த இரண்டு வீரர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், மற்றும் துஷார் தேஷ்பாண்டே.