
இங்கிலாந்து அபாரம்
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 19 ரன்களும், ரஹானே 18 ரன்களும் எடுத்தனர். லோகேஷ் ராகுல் 0, புஜாரா 1, கேப்டன் கோலி 7, பண்ட் 2, ஜடேஜா 4 என்று சிங்கிள் டிஜிட் பட்டியல் நீண்டுக் கொண்டே சென்றன. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், க்ரெய்க் ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளையும், ஓலே ராபின்சன், சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பிறகு, களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 432 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸ் 61 ரன்களும், ஹஸீப் ஹமீத் 68 ரன்களும், டேவிட் மலன் 70 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜோ ரூட் வழக்கம் போல, சதம் அடித்து போனால் போகிறது என்று 121 ரன்களில் வெளியேறினார். இந்திய அணி 2வது இன்னிங்ஸில் ஓரளவு சிறப்பாக விளையாடிது. தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து சொதப்பி வந்த புஜாரா 91 ரன்களும், கேப்டன் விராட் கோலி 55 ரன்கள் எடுத்தனர். இறுதியில், இந்திய அணி 278 ரன்களில் ஆல் அவுட்டாக, இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்று சமநிலை ஆனது.

நாசர் ஹுசைன்
இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் முதல் அரைசதம் இதுவேயாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வரும் கோலி, உண்மையில் கிரிக்கெட் விளையாடுவதையே மறந்தவர் போல் தான் ஆடி வருகிறார். ஆண்டர்சனிடம் இருமுறை, ஓலே ராபின்சனிடம் இருமுறை, சாம் கர்ரனிடம் ஒருமுறை என்று இந்த தொடரில் தனது விக்கெட்டுகளை ஸ்லிப்பிலேயே கொடுத்து அவுட்டாகி இருக்கிறார். அதுமட்டுமின்றி, அணியின் துணை கேப்டன் ரஹானேவும் தடுமாறி வருகிறார். களத்தில் ஒருமணி நேரம் கூட முழுமையாக அவரால் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. கேப்டனும், துணை கேப்டனும் இப்படி மாறி மாறி சொதப்புவது அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. "நான் மட்டும் சும்மாவா" என்ற ரீதியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டும் சொதப்பி வருவது தான் ஹைலைட். மற்றபடி, இந்திய அணியின் ப்ளஸ் பாயிண்ட் என்பது பவுலிங் தான். இந்நிலையில், இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் நிச்சயம் மீண்டு வருவார்கள் என்று, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், டெய்லி மெயிலுக்கு தான் எழுதும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

உஷாரா இருங்க
இதுகுறித்து அவர், "ஹெடிங்லேவில் இங்கிலாந்து பவுலர்கள் பந்துகளை நன்றாக ஸ்விங் செய்தனர். ஆனால், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் திறமையானவர்களாக இருந்தாலும், அவர்கள் பந்தை ஸ்விங் செய்யவில்லை. ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள், கடந்த ஆண்டு இறுதியில் அடிலெய்டில் நடந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆனால் அதன் பிறகு அவர்கள் மீண்டு வந்து தொடரைக் கைப்பற்றினர். இத்தனைக்கும், கோலி முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு பெர்சனல் காரணங்களுக்காக நாட்டிற்கு திரும்பிவிட்டார். இந்தியா எண்ணற்ற வலிமையை கொண்டுள்ளது. அதிக போராட்டத்தை வெளிப்படுத்துகிறது. கேப்டன் கோலி தான் இதற்கு முக்கிய காரணம். கேப்டன் விராட் கோலி 2014 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் தடுமாறியதை போல் இப்போது தடுமாறினாலும், இங்கிலாந்து சூழல்களை சிறப்பாக கையாண்டு, 2018ம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது நமது வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்கினார். ஆஸ்திரேலியாவிடம் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டான பிறகும், இந்திய அணி மீண்டு வந்தது என்பதை இங்கிலாந்து மறந்துவிடக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை விடுக்கும் ஹுசைன்
அதாவது, இங்கிலாந்தை நேரடியாகவே நாசர் ஹுசைன் அலர்ட் செய்திருக்கிறார். உண்மையில் ஒன்று சொல்கிறேன்.. இந்த தொடரில் இந்திய அணியை பார்த்து இங்கிலாந்து பயப்படுகிறது என்று உறுதியாக சொல்லலாம். லண்டன் லார்ட்ஸ் டெஸ்டில், பும்ராவை வம்பிழுத்ததற்காக, இந்தியா அணி ஒட்டுமொத்தமாக மீண்டெழுந்து தாக்கும் என்று இங்கிலாந்து எதிர்பார்க்கவில்லை. அப்படி நினைத்திருந்தால், அவர்கள் பும்ராவை வம்பிழுத்திருக்க மாட்டார்கள். "இவர்கள் என்ன செய்து வந்துவிடப் போகிறார்கள்?" என்ற தப்புக் கணக்கு போட்டார்கள். ஆனால், இந்தியாவிடம் இருந்து இத்தனை ஆக்ரோஷத்தை இங்கிலாந்து எதிர்பார்க்கவில்லை. ஹெட்டிங்லே பிட்ச், அவர்களின் ஸ்விங் பவுலிங்கிற்கு சாதகமாக அமைய, இந்தியாவை வீழ்த்தியிருக்கிறார்கள். ஆனால், இங்கிலாந்து நிம்மதியாக இல்லை. தொடரை வென்றுவிடலாம் என்று 100 சதவிகிதம் நம்பவில்லை. இந்தியா மீண்டு வந்து அடிக்கும் என்று அஞ்சுகிறார்கள். அதை அவர்களால் மறுக்க முடியாது. அதனுடைய வெளிப்பாடு தான், மூத்த வீரர் நாசர் ஹுசைனின் இந்த எச்சரிக்கை. சிறுபிள்ளைகள் போல், இங்கிலாந்து வீரர்கள் எங்கே கோட்டை விட்டு விடுவார்களோ என்று அஞ்சி, ஒரு சீனியர் வீரராக பொறுப்பாக செயல்பட்டு, இங்கிலாந்து அணியை தனது கட்டுரை மூலம் எச்சரித்து விழிப்படைய செய்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications