ட்ரினிடாட்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 5வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடி வருகிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற 365 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன் பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 76 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.

போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் 5வது நாளில் பந்துவீச்சு சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்திய அணியின் அஸ்வின் - ஜடேஜா இணை வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களை எளிதாக வீழ்த்தி அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற 289 ரன்களே தேவை என்பதால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று பார்க்கப்பட்டது.
இதனால் 5வது நாள் ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் நேற்றைய ஆட்டத்தின் போதே மழை அடிக்கடி குறுக்கிட்டதால், போதுமான ஓவர்களை இந்திய அணியால் வீச முடியவில்லை. இதனால் 5வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் 98 ஓவர்கள் வரை வீசலாம் என்று நடுவர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் ட்ரினிடாட் வானிலை நிலவரம் இந்திய அணிக்கு சாதகமாக இல்லை. ட்ரினிடாடில் நேற்றிரவு முதலே கனமழை பெய்ததால், இன்றைய நாளின் ஆட்டம் நடக்குமா என்று சந்தேகம் இருப்பதாக வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 5ஆம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், இரு அணிகளும் இதுவரை ஹோட்டலில் இருந்தே கிளம்பவில்லை. அதேபோல் மைதானத்தில் விரிக்கப்பட்ட பாய்களிலும் மழைநீர் அதிகமாக உள்ளது. வானிலையும் மோசமாக இருப்பதால், முதல் செஷன் நடக்குமா என்று வர்ணனையாளர்கள் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.