லண்டன்: உலக கோப்பை இறுதியாட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி, இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று அஷ்வின் கணித்துள்ளார்.
உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, சில ஆண்டுகளாக அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துள்ளது.
கோலி தலைமையிலான இந்திய அணியும், சளைத்தது அல்ல என்று கோணத்தில் வலுவாக திகழ்கிறது. ஆஸ்திரேலிய அணி ஸ்மித் மற்றும் வார்னரின் வருகையால் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணி, பவுலிங்கில் அசத்தி வருகிறது. இலங்கையை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே அதற்கு உதாரணம். மேற்கிந்திய தீவுகளும் சிறப்பான அணியாக காணப்படுகிறது. ஒவ்வொரு அணியுமே வலுவாக திகழும் நிலையில், உலக கோப்பை குறித்து பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், உலக கோப்பை எந்த அணிக்கு செல்லும் என்று அஸ்வின் கணித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: இந்திய அணியில் பேட்டிங், வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து என அனைத்துமே சிறப்பாக உள்ளது.
இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதி போட்டியில் மோதும். இங்கிலாந்து உள்ளூர் அணி என்பதால் ஆதரவு அதிகம். ஆனால், அருமையாக விளையாடி இந்த முறை, இந்திய அணி உலக கோப்பையை வென்று தாய்நாடு திரும்பும் என்பது எனது நம்பிக்கை என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.