டெல்லி: இந்திய கிரிக்கெட் அணிக்கு டுவென்டி 20 உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்குப் பின் பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை வாரிய செயலாளர் அனுராக் தாக்கூர் இன்று தெரிவித்தார். சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமண், கங்குலி ஆகியோர் கொண்ட ஆலோசனைக் குழு இதுதொடர்பாக தனது கருத்தைத் தெரிவிக்கும் என்றும், அதன் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தாக்கூர் கூறினார்.

மேலும், ஆஸ்திரேலியா்வுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியா தொடர்ந்து தோல்வியுற்று வருவதை வைத்து கேப்டன் டோணியைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் தாக்கூர் கூறினார்.
பயிற்சியாளர் குறித்து தாக்கூர் கூறுகையில், முழு நேர பயிற்சியாளர் தேவை என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ரவி சாஸ்திரியை உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டித் தொடர் வரை இயக்குநராக நீட்டிக்க முடிவு செய்தோம். தற்போது அதை டிஸ்டர்ப் செய்ய விரும்பவில்லை.
எனவே எதுவாக இருந்தாலும் உலகக் கோப்பைக்குப் பிறகுதான் நடைபெறும். அடுத்த சீசனில் நாம் 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளோம். எனவே முழு நேர பயிற்சியாளர் அவசியம். அதை வாரியம் உணர்ந்துள்ளது.
நம்மிடம் ஆலோசனைக் குழு (சச்சின், விவிஎஸ், கங்குலி) உள்ளது. அவர்கள் ஆலோசனையைக் கேட்போம். அதன்படி நடப்போம் என்றார் தாக்கூர்.